சனி, 30 ஏப்ரல், 2016



மிதக்கும் தக்கைகளில்
உள்ளே முள் வைத்து
ஊண் முலாம் பூசி
உலையேற்றும்
தோரணையோடு
தொங்கிக் கொண்டிருக்கும்
இரை நாக்குகளே
தெளிந்த நீர் திவலைகளை
இனியாகிலும் தீட்டாக்க வேண்டாம்

கனவுகளின் மீன் குஞ்சுகளை
உங்கள் பசிப் பாசி “சத்து”க்கு
பந்தி வைத்து பலி பீடமேற்றி
ஆங்காங்கே அசுரர்களாய்
அவர்களின் நதிகளை
தூர் வாரி நீங்கள்
துப்பரவு செய்ததாய்
கூவங்களில் வீசிய
கொடுமை போதும்


உடையும் பொம்மை கண்டாலே
உதிர்ந்து விழும் பூ மனசுகளை
வேரோடு  சாய்த்துவிடும்
வெறித்தனம் வேண்டாம் இனி..

புலர்வின் வெளிச்சங்கள் சுமந்த
விடிவெள்ளிகளை
உலுக்கி உதிர்த்து உயிர் பலியாக்காது
அவர்களின்
வதிவிடங்களில் வாழவிடுங்கள்


மின் வேட்டுகளையோ
இடி முழக்கங்களையோ இறக்கி
பெருவெள்ளத்தை துவக்கி வைக்காமல்
நட்சத்திரங்களின் வானத்தை
சிதைத்து விடாமல்
சன்னலை திறந்துவிடுங்கள்
தூறும் மழை ரசித்து
துள்ளி மகிழட்டும்
அந்த குழந்தை மீன் கூட்டங்கள்

இலைகளை உலுக்கி விடாதீர்கள்
கனவுகள் உடைந்து விடும்
பட்டாம் பூச்சிகளின் வெளி
அலாதியான உலகம்.


*****************
சிறுவர்கள்,சிறுமிகள் மீதான கொடுமைக்கு

எதிரான குரலாய்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கசப்பில் முடியும் கடைசித்துளி..




ஆற விட்டு,ஆறவிட்டு
அருந்தி முடிக்கிறேன்
காலம் என்னிடம் கையளித்த
இந்த தேனீர் கோப்பை
தீரும் நேரம்


பழகிப்,பழகி பருகியாயிற்று
இனிப்பில் தொடங்கி
கசப்பில் முடிகிறது கடைசித்துளி


நிலைக்க விடாது நிதம்
பின் தொடர்கின்ற
பிணக்குகளை விட்டும்
துரிதமாய் நான் மிக தூரமாவேன்

இப்போது கடக்க இருக்கும் படி
கடைசிப் படியாய் இருக்கலாம்
இந்நொடி உள்ளிழுத்த சுவாசம்
இறுதி மூச்சாய் இருக்கலாம்


எந்த குளிருக்கும் தெரியாத
ஒரு கோடையை
எந்த பகலும் அறிந்திரா
ஒரு இரவை
எந்த பேச்சுக்கும் பதிலற்ற
ஒரு மௌனத்தை
நிரந்தரமாய்

நான் விட்டுச் செல்வேன்!

சிலிர்ப்பு மிகு இந்நொடி.....,


அதிரசங்களில் இல்லா
சுவையூறிய உன் மொழி நடையில்
காந்தத்தை மிஞ்சிய
வசீகரத்தின் ஈர்ப்பால்
உன்னை வந்தடைந்திருக்க வேண்டும்
என் மனப் பட்டாம்பூச்சி

காதல் பூமேயும் தேனீயாய்
கண்களை சிபார்சு செய்யும் வனத்தில்
உள்ளச் சிறகசைய மிதக்கிறேன்

தவிர்க்க முடியா இனிமைகளில்
லயித்தல் சுகமாகும் கணம்
வாசமிகு ஜவ்வாதுகளில்
ஒன்றி விடுவது இயல்பாகிறது.

கற்பனைக் கொடி துளிர்க்க
நெற்றிக் கிளையில் குங்குமப் பூ
கூடை நிறைக்கிறது
கொத்து மல்லி வாசம்
அல்வாவின் ருசியில் எச்சில் புரள
நாவெங்கும் மாதுளை முத்துக்கள்

சிலிரப்பு மிகு இந்நொடி
கனவுகளின் தீர்ப்பை
திருத்தி எழுதுவது விதி என்றால்
ஆயுளுக்கும் போதுமானதாய்
காலமே எனக்கொரு
கைக்குட்டை செய்தனுப்பு

இடம் பெயர்ந்து
பரீட்சையமற்ற பாதைதான்
பயணமென்றால்
நான் தொலைகிறேன் வழிவிடு

சூழ்நிலை சுவரில்
ஆணியாய் என்னை அறை
அவனில் என்னையோ
என்னில் அவனையோ
மாட்டி விடுவதற்கான கட்டத்தை
நெருங்கிவிட்டதா இறுதிச்சுற்று
அப்படியாயின்
அவனது முற்றத்தில் என் கோலத்தை
கண்ணீரில் கரைத்து
எப்படி வரைவது என்ற இடத்தில்தான்
முதல் புள்ளியை வைக்க வேண்டும்.


வியாழன், 17 மார்ச், 2016









அடர்வனமற்ற
இருப்பின் பால் தனித்து
ஒற்றை கால் தவத்தில்
ஒரு கடிய வாழ்வை
நகர்த்திய பெண் பட்சி

வற்றிய நதிகளின் எல்லைதாண்டி
குஞ்சுகளின் இரைக்காய்
பாலை வெளியேகி
ஆட்டிடைச்சியாயும்
ஊண் தேடியலைந்ததாய்
கேவி அழுதிருக்கிறது என்னிடம்
நான் குஞ்சாய் இருந்த வேளையது

மனசு தாளாமல்
வலியோடு அழுதிருந்தேன்
வேறெதற்கும் வழியற்று நானும்

பின் வந்த காலங்களில்
பசித்திருந்த பொழுதுகளை சேமித்து
சுய அலகின் இறகுகளால்
கூடும் பின்னியது

தன் குஞ்சுகளின் வாழ்வு துலங்கும்
கனவுகளில் சிலிர்த்த
பொழுதொன்றில்
தன் ஆயுள்குளம் வற்ற
கணக்கு வழக்குகளை முடித்து
கரை ஏறிற்று

மீட்சி பெறு கணம்
எம் விழிகளில்
நதிகளை திருப்பி விட்டு
இறுதி விடை வாங்கி
திரும்பி வரா திசை நோக்கி
உயிருதிர்த்திப் பறந்தது
அவ்வெண் கொக்கு.
***********
கடந்த 08-03-2016 அன்று மகளிர் தினத்தில் வலியோ,வருத்தமோ இன்றி

ஓய்வெடுக்க மரணத்தின் மடியில் தலை சாய்ந்து இறையடி ஏகிய என் இளைய தாய் நினைவாக!
 

மலைப் பூவில் அலையும்
மேக வண்ணாத்திகளின் சிறகில்
வளைகிறது நிற வாளின் கூர்”மை”

பின் அந்தி
மேல் திசையில்
மஞ்சள் சோறாக்க
கழுவி துடைத்த வான இலை
கோடை விருந்துக்கு தயாராய்

நட்சத்திரங்களின் கண் பட்டு
ஒளிரும் பிரயாசத்தில்
மின்னி திளைக்கிறது
உப்புநீர் சாலையில் பால்நிலா


சாளரத்தை சாத்தி தாளிட்டு
திரை சீலையை
இழுத்து விட்ட
இந்து சமுத்திர கடல் வீடருகில்
கோடைக்குள் தாகிக்கும் குடியிருப்புகள்


நறுமுகைகள்
பனியில் இதழ் திறக்க
கனவில் பூவுதிர்க்கும் சொற்கவனம்
வேர்படர வாடி தேய்கிறது
அந்திம மடிப்புகளில்

மழையற்ற வெம்மையில்
சமுக பதக்கடைகளின் விளைச்சல்
அமோகமாய் ஆக
சாக்குகளை நிறைக்கின்றன
வெறும் கொந்துகள்

இடைவெளியின்
இணைப்புச் சங்கிலிகள்
கண்ணறுந்து துண்டிக்க
நங்கூரம் விலக
பிடி தளரும் படகாய் அவ்வோடம்

கால காற்றின் பால்
இழுபடுகிறது இருப்பு
பாலையை சமீபித்தபடி


யாரோ விட்டுச் சென்ற
தனிமையின் அருகில் யாரோ

நீர் வற்றிய குளக்கரையில்
அலைந்திருக்கின்றன
பசித்தலைந்த பட்சியின் அலகுகள்

பெயரை எழுதி வைக்காமல் போன
எவரோ ஒருவரின் வாழ்வின் தடம்
ஈரம் காயாமல் இருக்கிறது
மழை விட்டுச் சென்ற
கோடையையும் தாண்டி!


ஞாயிறு, 20 டிசம்பர், 2015

திருகோணமலையில் 15-12-2015அன்று தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டு
அமைப்பும், கனடா படைப்பாளிகள் உலகமும்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடாத்திய
இலக்கிய விழாவின் போது எனது கவிதை புனைவுக்கு கிடைத்த சான்றுகளும் விருதும்.

“புகழ் அனைத்தும் இறைவனுக்கே!”




சனி, 19 டிசம்பர், 2015

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்விகலைகலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச அளவில் 2015 நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில்  முதலாமிடம் பெற்ற எனது கவிதைக்கு கிடைத்த சான்றிதழ்.