திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஒருத்தியின் கண்ணீர் சமுத்திரம்.


 ஊறிக்கசிந்த விரக தாபத்தில் தனித்தபடி
இளமையை தின்றுகொண்டிருக்கும்
பசி எனது

நிறமிழந்து மங்கிப்போகும் இத்தேடலில்
நீதானென்று அனுமானிக்கமுடியாது
ஒவ்வொரு முறையும்
தோற்றுபோகிறதென் விழிகள்
உன் குரல் பருக எத்தனித்து தாகித்தபடி
செவிடாகிக்கொண்டிருக்கிறதென் புலன்கள்
 பூப்பானதிலிருந்து
இன்றைய தேதிவரை புதிது,புதிதாய்
பகிர்ந்து கொள்ளவென்று நதிகளை இணைத்து
ஒரு கடல் முத்தம் தேக்கிவைத்திருந்தேன்

 என் தேடலின்
கனவிலும் உன்னை காண வில்லை
இப்போதென்ன……..,
கயல்கள் குதித்த காலம் மாறி 
முயல்கள் பதுங்க கரைகள் வளரும்
காடாகும் இனி இந்த சமுத்திரம்.