செவ்வாய், 11 ஜூன், 2013

நம்பிக்கையின் பாத்திரம்.

 
சமநிலை தளர்ந்து கலங்கிய
சமுத்திரமொன்றுக்கு
சிறு சிற்றோடை
சமாதானம் சொல்கிறது

பூ வேரை
புலம் விசாரிக்கும்
புனிதம் நிகழ்கிறது...

ஆகா..,
அபிமானத்துக்குரிய
ஆச்சரியம் நம் அருகில்!

நம்பிக்கையின் பாத்திரத்தில்
வியத்தகு விருது
காலம் வழங்கிய காணிக்கையாய்

உயிர்ப்பு மிகு
உயிர் பூவே
பாலக பருவ பசும் தளிர் மகனே
நீ அவளை
பெற்றவன்போல்
பேனுகிறாயே எப்படியடா?
சமகாலத்தில் இது சாத்தியம்?

நேற்றைய பொழுதுகள்
உன்னை பார்த்து
நிலைகுலைந்து
தலைகுனிந்து
தவிக்கட்டும் இனி..

முழுசாய் இருக்கும்
பெற்றவர்களுக்கு
முதிசம் காணும் முன்
முதியோர் இல்லத்திற்கு
முகவரி கொடுக்கும்
மகன்களுக்கு மத்தியில்
மழலை மகான் நீ..

பெற்றவளின் ஊனத்தை
பேணி மதித்து
அவளுக்கு அணிவிடை,
பணிவிடை செய்ய
ஆயத்தப் பட்டு
பிரியமாய் பிசைந்து
உயிரை தந்தவளுக்கு
உயிர் ஊட்டுகிறாயே
சரித்திரத்தை புரட்ட வந்த
சமத்தொ நீ?

சமுகத்தை நிமிர்த்த வந்த
சான்றா நீ?!
வாழ்த்துக்கள் மகனே

வரலாறு பேசட்டும் உன் பெயரை.

புளிய மரத்தின் சாபம்!



உன் எல்லைக்குள் வளர்ந்ததால்
வதைகள் எனக்கு வரமாகிற்று

முறிக்கின்றாய்
தறிக்கின்றாய்
இலை பறிக்கின்றாய்
பூக்கொறிக்கின்றாய்
இன்னும்.........,
மிலாறு கொப்புகளால்
துளிர் திருகி
துன் புறுத்துகிறாய்,
பிள்ளைகளுடன் ஏறி
என் பிடரியை பிய்க்கின்றாய்  

பிஞ்சு,காய்,பழம்
எதை விட்டாய் என்னிடமிருந்து..?

சில நேரங்களில்
கம்பு கொண்டு வருகிறாய்
அது என் பரட்டை தலையில்
சிக்கி விட்டால்
கற்கள் கொண்டு எறிகிறாய்

உனது பிணிக்கு மருந்தாய்
எனது பட்டையையும் சில நேரம்
பட்டை தீட்டுகிறாய்
அரைத்து தேய்த்து
ஆறுதல் அடைகிறாய்

என் விரல்களை உடைத்து
உன் உலைக்கு உபயமாக
அக்கினியோடு சாம்பலாக்கி
சமாதி கட்டுகிறாய்

எனக்கு பூக்காலம் வந்தால்
அது சாக்காலம் என்றே
சலித்துக் கொள்கிறேன்
மரத்துக் கென்றொரு
மரியாதை தராமல்
மரத்துப் போன மனிதமாய்
உனது மனம்

நீ ஏற்படுத்திய
அதிகாரமென்னும் ஆட்சி நீட்சி
ஆயுளுக்கும் போதுமான புரிதல் அவை
இன்று கோபத்தால் வெந்து
கொதித்து போயிருக்கும் என்னில்
ஊஞ்சல் கட்டி ஆட வா
கிளையால் உடைந்து உன்னை
விழ வைத்து நான்

வேடிக்கை பார்க்கிறேன்!