சமநிலை தளர்ந்து
கலங்கிய
சமுத்திரமொன்றுக்கு
சிறு சிற்றோடை
சமாதானம்
சொல்கிறது
பூ வேரை
புலம்
விசாரிக்கும்
புனிதம்
நிகழ்கிறது...
ஆகா..,
அபிமானத்துக்குரிய
ஆச்சரியம் நம்
அருகில்!
நம்பிக்கையின்
பாத்திரத்தில்
வியத்தகு விருது
காலம் வழங்கிய
காணிக்கையாய்
உயிர்ப்பு மிகு
உயிர் பூவே
பாலக பருவ பசும்
தளிர் மகனே
நீ அவளை
பெற்றவன்போல்
பேனுகிறாயே
எப்படியடா?
சமகாலத்தில் இது
சாத்தியம்?
நேற்றைய
பொழுதுகள்
உன்னை பார்த்து
நிலைகுலைந்து
தலைகுனிந்து
தவிக்கட்டும்
இனி..
முழுசாய்
இருக்கும்
பெற்றவர்களுக்கு
முதிசம் காணும்
முன்
முதியோர்
இல்லத்திற்கு
முகவரி
கொடுக்கும்
மகன்களுக்கு
மத்தியில்
மழலை மகான் நீ..
பெற்றவளின்
ஊனத்தை
பேணி மதித்து
அவளுக்கு அணிவிடை,
பணிவிடை செய்ய
ஆயத்தப் பட்டு
பிரியமாய்
பிசைந்து
உயிரை
தந்தவளுக்கு
உயிர்
ஊட்டுகிறாயே
சரித்திரத்தை
புரட்ட வந்த
சமத்தொ நீ?
சமுகத்தை
நிமிர்த்த வந்த
சான்றா நீ?!
வாழ்த்துக்கள்
மகனே
வரலாறு பேசட்டும்
உன் பெயரை.