வியாழன், 20 டிசம்பர், 2012

ஓவியத்தின் குமுறல்.




கிறுக்கியவன் பிசிறிய
வர்ணங்களுக்குள்ளிருந்து
உன்னை வசீகரித்ததாய்
என்னை எடுத்து
சட்டங்களிட்டு நாற்திசையும்
கண்ணாடி சிலுவையில்
அறைந்து வைத்திருக்கிறாய்

ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அழகு
அற்புதமாய் இருப்பதாய்
காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியம் பற்றி
காண்பவர்கள் கருத்து பகிர்கிறார்கள்

வரைந்தவனும்,வாங்கிய நீயும்
பாராட்டை பங்கிடுகிறீர்கள்
சட்டங்களுக்குள் மௌனித்து
உடைந்து சிதறும் உணர்வு
என்னுடையது என்பதை
அறியத்தான் ஆளில்லை.

அதன் மொழியறியாமல்
எல்லா இல்லங்களின் சுவர்களிலும்
ஒரு ஓவியம்
மௌனித்தபடி
தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
என்னைப்போல்!