வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

புழுவின் உணவு.



 பூச்சிகள் பீச்சும்
ஒரு புழுவுடன் வசிக்கிறேன்
பழகிப்போன விதியென்றாகிற்று.

அருவருக்கத்தக்க,விலக்கப்பட்ட
எல்லாவற்றிலும் மேய்ந்துவிட்டு
அருகே நெளியும் புழுகண்டு
உடல் கூனிக்குறுகும்
விம்மிக்கசியும் மனசை பெற்றோர்களின்
வறுமையால் ஒற்றிக்கொண்டு
வாழவேண்டியதாகிற்று 
வாழ்வென்பதால்.

விளக்கணைந்து
குறுக்கீடுகளற்ற நிசியில்
நிரம்பித்ததும்பும்
மௌனத்தினூடே தாவி ஊரும் புழு அது
என்னை இலையாய் கிடத்தி
இரா முழுக்க
இரகசிய மர்மங்கள் துளாவி
பசியாறி மகிழும்
......................................,
விடிய தாழ்திறக்கும் கதவின் பின்
விரிந்து கிடக்கும் பழுக்கள்
இதயத்தை அழுத்தும் சுமைகளாக!

எனது பகல் முழுவதையும்
அருந்தி ருசிக்க
மனையும்,பிள்ளைப்பூச்சிகளும்
இரவை தின்று தொலைக்கும்
அருகிலுள்ள புழு.

இப்படித்தான் ஒவ்வொரு பொழுதுகளும்
புழுவின் உணவாகி
செ'ரி'(த்)துக்கொண்டிருக்கின்றேன்.

துயர் மிகு பாடல்.




காதலில் பிரிவு கடினமானது
ஊறி உருகி உதிர்கிற படி உயிர்.
நிமிஷா,நிமிஷ  நெருக்குதல்களில்
வருஷங்கள் அனுபவித்த வதை!

மிகவும் அந்நியப்பட்டுப்போன
நமது அன்பு பற்றி
துயர்மிகு விசும்பல்களுடன்
ஒலிக்கின்றது என் பாடல்.

ஆழியில் சுழலும் குமிழியின் தகிப்புடன்
தன் உருவை தக்கவைக்க இயலாமல்
தவிக்கின்றதென் ஆன்மா

இனி.....,
மோட்ஷ விமோசனத்துக்கான
பிரயத்தனங்கள் என்னிடமில்லை;
வாழ்வு பற்றிய கனவை
பிரிவு கலைத்து விட்டது.

தனிமையின் வேக்காட்டில்
உயிர்,உருகி சிதைகிற நிமிஷங்களில்
புழுங்கி வெந்த மனசை நான்
பசியாறிக்கொண்டிருக்கின்றேன்.

வெப்பிசாரக்கோடுகளால்
காலம் நிரப்பி வைத்திருக்கும்
கண்ணீர் வெளியில்
என்னிடமிருப்பது......,
வெறுமையை தவிர வேறில்லை.

உயிரே உனக்கெப்படி அங்கு?