ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருக்கும் காலம்.




ஒன்றை தொலைப்பதும்
வேறொன்றை தேடிஎடுப்பதுமான
நிலைப்பாடோடு தன் பயணத்தை
தொடக்கிவைத்திருக்கின்றன
இன்றைய பொழுதுகள்

விமோசனத்துக்கான காத்திருப்போடு
நம்பிக்கையின் முதிர் நிலையை
கடந்து கரைஏறியபடி வாழும் ஜீவிதம்

தவறுகளை ஒழித்து வைப்பதற்காக
இருள்களை நேசிக்கின்ற
மனிதர்களோடு மல்லுக்கு
நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் என..
நிறம் வெளிறி,நிஜம் தொலைந்து
பிடிக்காத ஒன்றையே
தெரிவு செய்ய வேண்டிய
ஒரு தேய்வு நிலை

சர்பத்தையோத்த
விஷங்களை பீச்சும்
அதிகாரங்களுக்கிடையில்
நெளிய வேண்டியிருக்கின்ற நெருக்குதல்
இன்னும் சொல்வதென்றால்;
காயங்களை மருந்தாக்கிக்கொண்டு
மாயங்களுக்கு
மகுடி ஊதவேண்டியிருக்கின்றன

விபத்தின் வலியிலிருந்து
விடுபடுவதற்குள்
சந்தோசத்தின் சஞ்சரிப்பு
நிகழ்வில் இறந்தவன் மனைவி
நிறைமாதம்
கணவன் தொலைந்த
கவலை மறப்பதற்குள்
பேறு கிடைத்த பெருமிதத்தில்

யாரையும் தெரியாது என்று
விலகி விடத்தான் விருப்பம்
இருந்தாலும்;இன்று
தெரிவு செய்யப்பட்டதன் முறைப்படி ஒருவரை
தெருவுக்கு அழைத்துவந்து
நிறுத்தி விடுகிறது காலம்
ஒரு இடைவெளியை நிரப்பிவிட!

புதன், 5 செப்டம்பர், 2012

என் குடியிருப்புக்கு உன்னை அழைக்கிறேன்.


வேர் அறுந்த வலியுடன்
வசித்தல் என்பது எனக்கு
வாழ்வாகிற்று.....
உறவற்ற அன்றில் நான்
ரணங்களின் குறிப்புகளோடு
அழித்து,அழித்து எழுதப்பட்டிருக்கின்றன
எனது நாட்கள்.

சொப்பனங்களில் லயித்து
வெகுமதிகளில் சுகித்து
ஒரு பறவையாய் சிறகடிக்க
இறக்கைகள் கத்தரிக்கப்படுவதற்கு-முன்
எனக்கும் இருந்ததொரு எண்ணம்

மன்னிக்குக,
வசீகரங்களை தூவி நீ வாழ்த்த
ஏற்று வணங்கி வரவேற்கும் நிலையில்
இப்போது என் இருப்பு இல்லை.


உன் பூக்கூடைகளை சுமக்க
மனசின் கை
ஆசையோடு அணுகுகிற போதும்
வலிமை இழந்த தகிப்பில்
மீழ்கிறேன் பழைய இடத்திற்கே!

என் இரவுகளை பருகிப்,பருகி
தனிமை வயிறு முட்டிச்சாகும் இனி..
இலகுவாக யாரும் வந்தடைய
வசதியாக்கி என் தேசமே
அமைவிடத்திற்கு
அடையாளமிட்டிருக்கின்றது
வழியில் இருக்கிறதென் குடியிருப்பு
வாசல்களே வீடுகளாயிருக்கும்
என் இல்லிடத்திற்கு வா...

காதலோடு அல்ல....,
ஒரு கூடை கைக்குட்டையோடு!