செவ்வாய், 27 நவம்பர், 2012

வெட்கமில்லா மனிதர்கள்.




விசுவாச மனிதனென்றும்
பசுவான புனிதனென்றும்
அக்கரை உள்ளவன் போல்
அவைகளை நிரப்புகின்றார்
சர்ச்சைகள் என்று வந்தால்
சபையதில் தலைமறைத்து
பச்சையாய் பொய்கள் சொல்லி
பதவியை தக்கவைப்பார்
வெட்கமே இல்லாவாறு
வெளியிலே தலைவன் என்பார்

பாமரன் போன்று பேசி
பம்மாத்து வேலை செய்யும்
கொச்சையாய் போன ஒரு
கொள்கையை வைத்துக்கொண்டு
அச்சமே இல்லாவாறு
ஆழ்கிறார் ஊரை எல்லாம்
நிச்சயம் இவர்களெல்லாம்
நீதியின் முன் நிறுத்து
தண்டனை கொடுத்து நன்று
தகுதியை களைய வேண்டும்

உத்தமன் போல பேச்சு
உளுத்தது போல சேவை
சத்திய வானைப்போல
சமுகத்தை விற்றபடி
புத்தியே கெட்டுலவும்
போலிகள் முகம் கிழித்து
வெட்கமே இல்லார் என்று
வெளியிலே காட்ட வேண்டும்

நம்மிலிருக்கும் இன்னொரு முகம்.




மனசுக்குள்
விஷமுள்ள பாம்புகளும்,
கொடிய மிருகங்களும்
வளர்த்தபடி
நாம் எப்போதும் 
சுயநலத்தின் வட்டத்தினுள்ளேயே
சுற்றிக்கொண்டிருக்கின்றோம்

நமக்கு தெரியாததை விட
தெரிந்தது அதிகம் என்று
தெளிந்தும் இருக்கிறோம்
பூஜ்ஜியத்தினுள் அதிகம் பொருள்
இல்லை என்பதை
இன்னும் புரியாதவர்காளாய்

வெப்பம் தகிக்கிற வேளை
நிழல்களை தரிசிக்கிறோம்
இலைகள் உதிர்கிற கணம்
வேர்களை மறந்து விட்ட படி..

கணிப்புகள் நம்மை சூழ்ந்து
சிந்திக்க வேண்டும் என்றே
முகங்களை வடிவமைத்து
வரம்புகளை மீறுவதர்க்கென்றே
கால்களை தயார் படுத்துகின்றோம்
ஒவ்வொரு முறையும்!