திங்கள், 1 டிசம்பர், 2014

"எழுத்து.காம்"என் எழுத்துக்கு வழங்கிய விருதும்,சான்றிதழ்களும்.

இந்தியா, தமிழ்நாடு புதுச்சேரியிலிருந்து உலகின் கோடியெங்கும் தினம் புரட்டப் படும் இணையதளமான "எழுத்து.காம்"என் எழுத்துக்கு வழங்கிய சான்றுகளை முகநூல் நண்பர்களின் பார்வைக்காக பதிவேற்றுகிறேன். இந்த விருதுகளை அக மகிழ்ந்து அனுப்பிய தோழர் பன்முக ஆளுமை அகன் என்கின்ற (அமிர்தகணேசன்)அவர்களுக்கும் இவைகளை என் வசம் கிட்ட சிரமம் பாராமல் இந்தியா இருந்து இலங்கைக்கு கொண்டு சென்று மீண்டும் நான் வசிக்கும் நாடான கத்தாருக்கு கொண்டுவந்து கையளித்த நண்பரும்,கவிஞருமான மெய்யன் நட்ராஜ் அவர்களுக்கும் இத்தருணத்தில் எத்தனை நன்றி மலர்கள் சொரிந்து வாழ்த்தினாலும் ஈடாகாது.மேலும் எழுத்து.காம் குழுமத்திற்கு கடப்பாடு உள்ளவனாய் இருப்பதில் பெருமையடைகிறேன்.அனைவருக்கும் நன்றி மலர்கள் சமர்ப்பணம்.


வியாழன், 27 நவம்பர், 2014

அப்பாவின் பேய் கதைகள்.



சிறுபராயம் முதல் எனக்கு
கதைகளில் கொள்ளை பிரியம் என்பதால்
எப்பவும் அப்பா ஏதாவதொரு கதையினை
சொல்லிக்கொண்டிருப்பார்

முதலில் பயங்காட்டுவதாய் வரும்
“பேய்”கதையில் தொடங்கி
அரச கதை,பின்-நரிக்கதை
சிங்கம்,புலிக்கதை,”கிரீஸ்”மனிதன் கதை
மொழிகடந்த தெருக்கதைகள் என
அது ஓவ்வொன்றும்
நீண்ட கதைகளால் ஆன கதைகள்
அவற்றை கேட்க
இனிமையாகவும்,சுவரஷ்யமாகவும்,
பயங்கரமானதாகவும் இருந்தன
கற்பனையில் கதைகளை
கட்டிச் சமைத்து கதைப்பது கேட்க
அப்போது பிடித்தமானதாய் இருந்தது
ஆனால்;பின்வந்த காலங்களில்
அப்பாவின் கதைகள்
சப்பையாகவும்,குப்பையாகவும்
சகிக்க முடியாதபடி இருந்தன கேட்க
பொய்க்கு கூட பொருந்தவுமில்லை
எனக்கு புத்தி பிடிபட்ட விடையம்
அப்பாவுக்கு பிடிபடாமல் இருந்திருக்கலாம்


அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார்
என்பதற்காக
எல்லாக் கதைகளையும்
கேட்டுக் கொண்டிருக்க முடியாது இல்லையா?
இன்றும் அப்படித்தான்
அப்பா கதை சொல்ல தொடங்கினார்
குறுக்கிட்ட நான்
அப்பாவிடம் சொன்னேன்


“இது எனது முறை”
நான் ஒரு கதை சொல்கிறேன் என்று
அப்பா காதுகளை கூர்மையாக்கினார்
என் கதை கேட்க
நான் சொன்னேன்
அப்பாவுக்குரிய மரியாதையுடன்

நீங்கள் ஓய்வெடுங்கள் என்று.

திங்கள், 10 நவம்பர், 2014

இரையாய் போகும் விதியானான் கதையொன்று.




கறவை பசுக்கள்
அடி மாட்டு விலையாகும் மண்ணில்
நாங்கள் எலும்பும் தோலுமாகி
விலை போகா மனித எருதுகளாய் இருந்தோம்
என அவன் சொன்னபோது
தொடக்கத்தில் நம்ப முடியாமல்தான் இருந்தது



குறிஞ்சி பூக்களில் குருதி உறுஞ்சி
நகர அட்டைகள் நகரக்காண
அது பொய்யில்லை என்று புலனாகியது


துளிர் மேய்ந்து பசி துறக்கும் தொடர் விதி
வெந்நீர் கோப்பைக்குள்
சாயம் போகும் வரை மிக நீளமானது

கூடை போதிகளாய் இருந்தோம்
என்ன பயன்
இடை தராசுகளில் கனதியற்ற இலவம் பஞ்சாய்
எங்கள் பக்க நாக்கு எழவே இல்லை
என்றவன் சொன்னபோதும்
நியாயமிருந்தது அவன் பால்



கை கட்டி நின்ற காலம் தொட்டு
அதே அலை வரிசையில்
வேற்று விலங்குகள் ஊடறுத்த அரவங்களில்
வெற்றிலையின் அடி கிள்ளி எறியும் காம்பாய்
வீசிய இடத்திலேயே வீழ்ந்து கிடந்தோம்
கழிவு கந்துகளாயும் என்றான்



குவ’லயங்களில்’
துயில் பற்றமறுத்த இரவின்
குளிரடர்ந்த அதிகாலை
வண்ணாத்திகள் கூட நான் வனம் ஏகிய நொடி
ஈரம் கவிய சரிந்து கவிழ்ந்து விழ்ந்திருந்தன
என் உறவுகளின் கனவு மாடங்கள் அவர்களுடன்.



மண்பற்று மீளா துயிலாய்
மறுபதிப்பு செய்யப்பட
மண்டியிட்டு கிடந்த மடமே மயானமாக
மலர்ந்து முகிழ்த்த மண்தரை
புல்வெளி புதைகுழியாய் போக
மலைமுகடு,பச்சைக்காடு
எங்கும் நிலை குலைந்து
பற்றி எரிகிறது கொழுந்து விட
இன்னும் பிளக்கும் மலைகள்
ஒப்பாரிகளால் வெடிப்பு விள


வண்ணாத்திகளின் உலகம் இருள
பேயலையும் காடு பயமுணர்த்தி வளர்கிறது
சூழ கடல் பெருக்கெடுக்க



எண் திசையும் தக்கை மிதக்க அமிழும் தூண்டில்
இரையாயிருந்தோம்
முதலைகள் மிஞ்சிய ஆழியில் என்றான்
பலியிட நிறுத்தப் பட்ட கடா ஒன்றின்
பாவங்களுடன்!

குறிப்பு - அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

ரோஷான் ஏ.ஜிப்ரி.



செவ்வாய், 23 செப்டம்பர், 2014

விறகென எரியும் நிழல்.


புல்வெளி படர்ந்து
முகமுலர்த்தி நகரும் காற்றில்
என் வாசக் கைக்குட்டைகளை
கொடுத்தனுப்பினேன்
உன் வியர்வையில் நறுமணம் விசிற

அருங்கோடையில் இளைப்பாறி
மடியே தஞ்சமென துயின்றும் இருக்கிறாய்
நிழல் பருகி நீ நெகிழ்ந்த காலங்கள் அது


வவ்வால்களின் இராப் போசனங்களில்
தீர்ந்துவிடக் கூடாதென்ற கூர்மையில்
இலைமறைத்து பழுக்க வைத்திருந்தேன்
உனக்கென கனிகளை தூவ
நீ தேடித்,தேடி பழங்கள் புறக்கிய பருவங்கள்
சொர்க்கமாய் இருந்திருக்கும் என் காலடி


பின் வந்த நாட்களில்......,
நெருக்கடிகளின் பேரிரைச்சல்
உன் ஆன்மாவை கொலை செய்யும் அளவு வர
இருப்பை சோதிக்க வந்து விட்டாய்


தவம் என்றதும்,வரம் என்றதும்
உன் பாசாங்குகளின் மாயை ஆயிற்று
அர்த்தமற்ற ஒரு முற்றத்தில்
இருப்பை தக்கவைப்பது
என்றைக்கும் சாத்தியமில்லை என
உணர்கையில் வலி அடர்ந்து
வேர்வரை விகாசிக்கின்றன

என்னை தேடியலைந்து தோற்றுத் திரும்பும்
பறவைகளிடம் சொல்லிவை
வாழ்வின் சூனியங்கள் கொடுமையானதென்று


உன் மார்பில் எறியமர்ந்ததாகவே
எண்ணிப் புகையும் உன் மனதிலிருந்து
சாம்பலென கூட்டித் தள்வதில்தான்
சந்தோஷம் எனில் கொழுத்திவிடு
வீழ்த்திய உன் முன்னால்  விறகென எரிகிறேன்.






சனி, 17 மே, 2014

மண்ணின் மைந்தனுக்கு மகிழ்வு விழா-2014

புகைப்படம்.

மண்ணின் மைந்தனுக்கு மகிழ்வு விழா-2014





எனது மைத்துனர் Dr U.L.BZEER(MBBS) அவர்களுக்கு அவர் பிறந்து வளர்ந்த கிராமமான இறக்காமம்,வாங்காமம் வாழ் மக்கள் சார்பாக பாராட்டு விழா நடாத்தி கௌரவித்து கையளித்த நினைவுச்சின்னம். 

மண் பற்று.



அமாவாசை இருளிலிருந்தும்
விடிவெள்ளி ஒன்றிலிருந்துதான்
உனது பொழுது புலர்ந்திருக்கும்

மடிதாவி மண் தொட்டதை மறந்து
நம்பத்தகாதபடி பெருமிதத்தோடு
வானிலிருந்து குதித்தவனாய்
அடி,நுணி அறியாமல்
ஆடுபவனே அறி
அணிய ஒரு கச்சை தந்தது
உனக்கு பூமி இட்ட பிச்சை
கொச்சைப் படுத்தாதே

மண்ணுக்கு மரியாதை செய்வதாய்
கோயில் கட்டி
கும்பிடாதிருந்தாலும் பரவாயில்லை
சாதிப் பெயர் வைத்து சாமியாடாதிரு
மண் மரத்தை வளர்ப்பதில்
எடுக்கும் சிரத்தை
மனிதன் காட்டுவதில்லை
மனிதன் மீதேனும்
தனக்கு தேவையற்ற ஒன்றின் மீது
சேவையாற்றுகிற
மண்ணை படிக்காத நீ மனிதனா

வானத்தின் விசாலத்தை
ஞாயிறின் கவர்ச்சியை
செவ்வாயின் குளிர்ச்சியை
ஆண்டாண்டாய் அனுபவிக்கிறாய்
பூமியின் எழுழ்ச்சியை பற்றி
எப்போதாவது எண்ணியதுண்டா?

ஊரை கொள்ளையடிப்பதிலும்
சுவரை வெள்ளையடிப்பதிலும்
காலத்தை கரைப்பவனே
ஏடு எடு பூமியில் நீ
விதையாய் விழுந்த
புதினத்தை புரியும்படி
இனியாகிலும் எழுதி வை
மண் உன் தாயையும் ஏந்தியதாய்
சந்திப்பும்,பிரிவும்
ஒரு முனையில் என உணர்த்து
உன் வாரிசாவது படித்து

மண்ணுக்கு மரியாதை செய்யட்டும்.

வியாழன், 15 மே, 2014

வழியெங்கும் பிதற்றுபவனின் குரல்

“அலகுகளால் செதுக்கிய கூடு” பற்றி

வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 

                                          கவிஞர் ரமேஷாலம்.
   

வணக்கம்.
இது எனக்குப் புது முயற்சிதான். மழலையைப் பேசத்
தடுமாறும் குழந்தையின் முயற்சியைப் போல.
ஒருவிதத்தில் பார்த்தால், அதிகப் பிரசங்கித் தனம்
என்று கூடத் தோன்றுகிறது. மிகவும் குறைவாகவே எழுதி இருப்பவன், மிகவும் குறைவாகவே அறியப்பட்டவன், ஒரு நூல் தொகுப்பின் மேல் வைக்கும் விமர்சனம் எத்தனை தூரம் மதிப்பிற்குரியது...என்பதில் எனக்கு ஐயம் இல்லாமலில்லை. இருந்தாலும், வாசிப்பவனின் கருத்துக்களை, எழுதுபவன் எதிர்நோக்கியே இருக்கிறான், அதில் எழும் பாராட்டால், தனக்கான உலகைத் தகவமைத்துக் கொள்கிறான் என்னும்
என் நம்பிக்கைதான் (என் கவிதைகள் குறித்து எனக்கான எதிர்பார்ப்புகள் இதுவாகவே இருப்பதால்) இந்த அதிகப் பிரசங்கித்தனத்தை
ஆவலுடன் செய்யச் சொல்கிறது என் மனதின் இந்தக் கணம். தளம் அறிந்த,
மூத்த, சிறந்த படைப்பாளிகளின் கவிதைகள் குறித்தான என் வாசிப்பின் அனுபவத்தை...
உங்களோடு பகிரும் ஆவலில் "அலகுகளால் செதுக்கிய கூடுகளில்" தன் மூக்கை நுழைத்திருக்கிறான்... "அலகுகளால் செதுக்கிய கூடு"...

எத்தனை அழகான, கவித்துவமான தலைப்பு..
என் நண்பர் ரோஷான். ஏ. ஜிப்ரி-யின் கவிதையின் தலைப்பு. வெளி நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழ் தாயின் புதல்வர் அவர். அலகுகளால் செதுக்கப்பட்ட..
தமிழர்களின் வாழ்வுக் கூடுகளைப் பிய்த்தெறிந்துவிட்ட இந்த நூற்றாண்டின் துயரங்களை, தன் இனத்தோடு கவிதைகளின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறவர் அவர். ஒரு பறவையின் முயற்சியைப் போல, பிய்த்தெறியப்பட்ட
கூடுகளைத் தன் அலகுகளால் மீண்டும், மீண்டும் செதுக்கும், (துயரங்களைப் பகிர்ந்த படியும், அவற்றைப் புறம் தள்ளிய படியும்,..அறம் வெல்லும்... அஞ்சற்க...என்ற படி) தன்னாற்றல் படைத்தவர். ஈழத் துயர் தவிர்த்து பொதுவில் பார்த்தாலும்...எல்லோருக்கும் அவரவர் வாழ்வு "அலகுகளால் செதுக்கிய கூடு" தானே. தலைப்பே பெரும் கவிதையாய், வாழ்க்கையாய்...பெரும் துயரமொன்றின் மீளா வெளிப்பாடாய் இருக்கும் ஒரு தலைப்பைத் தாங்கும்... புத்தகத்திற்குள்
நுழைந்திருக்கிறேன்.

ரோஷான். ஏ. ஜிப்ரி...இந்தத் தளத்தில் எல்லோருக்கும்
அறிமுகமான பெயர்தான். நான் தளத்தில் இணைந்த சில நாட்களுக்குள்ளாகவே...இவரது கவிதைகளைப் படிக்கும் வாய்ப்புப் பெற்று...பின் இன்றுவரை...அவரது கவிதைகளின் தொடர் வாசகனாய் இருப்பவன். ஒரு கதை எழுத்தாளருக்கு
தொடர் வாசகன் இருப்பது போல... ஒரு கவிஞருக்கு அமைவது... என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை இந்தத் தளத்தில் தொடர்ந்து எழுதுபவன் என்ற முறையில் நான் நன்கு அறிவேன். அந்த விதத்தில்...ரோஷான். ஏ. ஜிப்ரியின் கவி ஆளுமை பற்றி...நான் அதிகம் சொல்ல எதுவும் இல்லை.

தன்னைப் பற்றிய அறிமுக பக்கத்தில்...ரோஷான்...
"கூடை கூடையாய் கனவுகள் இருக்கிறது...
வாழ்வின் முகங்களைத் தவிர.."என்று எழுதி இருக்கிறார். கனவுகளை விதைக்க ஒரு பிடி மண்
இல்லாமல் துரத்தப் பட்டவர்களின் வாழ்வின் துயரத்தைச் சொல்ல இதைவிட வேறு வார்த்தைகள் கிடைக்காது. இத்தனைக்கும்...
ஒரு பிடி மண்ணுக்காக "குரு ஷேத்திரம்" நடத்திய வரலாறும், நாகரிகமும் நம்முடையது. எதையும் பாராமல் இருக்க, தன்னலத்தோடு மட்டும் இருக்க
கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாய் பழகிவிட்டோம். இதில் மாற்றம் எப்போது வரும் என்றுதான் இன்னமும்...கூடை கூடையாய் கனவுகள் சுமந்து வசிக்கிறோம்.

வாழ்தல் சுமையாகி விட்ட தீவிலிருந்து வெளியேறி விட்டவரின் வாழ்வின் துயரங்களைப்,
பெரும் பாடுகளைத் தன் கவிதைகளில் தொடர்ந்து எழுதி வரும் ரோஷான்...இந்தத் தளம் மட்டுமின்றி...தமிழின் பெரும் கவிஞர்களாலும் உற்று நோக்கப் பட வேண்டியவர்.அலங்காரமான வார்த்தைகளின்றி... வாழ்வின் வலியை...உணர்த்தும் எழுத்துக்களால்...தமிழை அலங்கரிக்கும் ரோஷன்...இந்தத் தளத்தின் வளரும் கவிகளால் வாசிக்கப் பட வேண்டியவர்...
விவாதிக்கப் பட வேண்டியவர்...நன்கு தளத்தில் பகிரப் பட வேண்டியவர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து..."அலகுகளால் செதுக்கிய கூடு" தந்தவரின் கவிதைகளுக்குள் நுழைகிறேன்.... "அலகுகளால் செதுக்கிய கூடு " தொகுப்பில்
தன் பங்களிப்பாக எட்டு கவிதைகள் அளித்துள்ளார்
ரோஷான்.
1) அடக்குமுறை
2) அலகுகளால் செதுக்கிய கூடு
3)ஓவியத்தின் குமுறல்
4)தொலைந்து போவதென்னும் வாழ்வு
5)முட்டைகளின் ஓடுகளிலான வாழ்க்கை
6)பசியின் வலை
7)பூக்களைப் பாடுகிறேன்
8)விருட்சத்தின் முகம்
என்னும் எட்டுமே மனிதன் தன் வாழ்வின் கூட்டிலிருந்து எடுத்தெறிந்து விட்ட எட்டு உயிர்ச் சுள்ளிகளைப் பற்றிப் பேசுகின்றன.

அடக்குமுறையில்...இந்த நூற்றாண்டிலும் பெண் குறித்தான ஆண் இனத்தின் அவலப் புரிதல்களை
எளிய, வலிமையான வார்த்தைகளில் சொல்கிறார்
ரோஷான்.
" என் மொத்த எடையில்..
மூன்றிலொரு பங்கு மாமிசம்
சிறிதளவு எலும்பு...நரம்பு...கூடுகள்...
கூடவே கொஞ்சம் குருதி...
புடைத்த மார்பு, பொதுவான நிறம்
பிள்ளைகளைப் பெறக் கூடிய பேறு
இவையனைத்தும் இடம் பெற்றவள்தான்
பெண்டாட்டி என்று
புரிந்து வைத்திருக்கிறாய்...."

மெத்தப் படித்தவர்கள் நாட்டில் நிறைந்து விட்டாலும்...ரோஷனின் கருத்தின் உண்மையின்
ஆழத்தை, செய்திதாள்களும், மெகா சீரியல்களும்,
சினிமாக்களும், நமக்கு தினம்தோறும் நினைவுபடுத்திய படியேதான் இருக்கின்றன.

அலகுகளால் செதுக்கிய கூடு...களில் தலைமுறைகளின் வாழ்வின் கனவுகளைச் சிதைத்துக் கொன்றுவிட்ட சந்தர்ப்பவாதிகளைக்
குறித்துச் சாடுகிறார் ரோஷான்.

"தேன் கூடுகளைக் கலைப்பதில்
நீங்கள் எடுக்கும் கவனம்
அதன் ஆக்கத்திற்கான
சிரமத்தை ஆராய ஒருபோதும்
சிரத்தை எடுத்ததில்லை
முரட்டுக் கோடாரிகள் கொண்டு
நீங்கள் வீழ்த்தியது...

....வம்சத்தின் வரலாற்றை..."

ஆனாலும்...காலத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ரோஷன் தன் இனத்திற்கு நம்பிக்கையூட்டும் வார்த்திகளால் இந்தக் கவிதையை முடிக்கிறார்...

"காலத்தைத் திரும்பிப் பார்த்து...
கைச் சேதங்களைக் கணக்கிடும் போது
நிராயுதபாணிகளாய் நிற்பீர்கள்...
எதுவுமற்று ஏதிலியாய்க்
குற்றவாளிக் கூண்டில்..
அப்போது நான்...

அலகுகளால் தயார் செய்து கொண்டிருப்பேன்
இன்னொரு கூட்டை வேறொரு கிளையில்..."

கவிஞனின் பெரும் நம்பிக்கையே...காலம்தான்.
அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல்வதற்காகத்தான் கவிதை அவன் கையில் ஆயுதமாகிறது.

பெரும் நம்பிக்கையைச் சொல்லும் ரோஷானின்
மற்ற கவிதைகள் பற்றிச் சொல்ல... ரோஷானின் மூன்றாம் கவிதை "ஓவியத்தின் குமறல்" ஆகத் துவங்குகிறது.அழகை ஆவணப்படுத்துவதுதான் ஓவியம் எனப் புதுக் கருத்தை முன் வைக்கும் ரோஷான்...வாங்கியவனும், வரைந்தவனும்...ஓவியத்தின் குமுறலை உணராமல்...பாராட்டைப் பங்கிட்டுக் கொள்ளும் பண்பற்ற தன்மையைச் சொல்கிறார். .உடைந்து சிதறும் உணர்வுகளின் வலி,
சட்டங்களுக்குள் மரணித்து விடுகிறது என்கிறார்..
அனாதை இல்லங்களிலும், காப்பகங்களிலும்...
முதியோர் இல்லங்களிலும்...சுவற்றில் மாட்டப் படாத ஓவியங்கள் திரிவதை... இந்தக் கவிதையின் உருவகமாகக் கொண்டால்...மொழியறியாத மௌனங்களின் வலி...நம் வீட்டின் சுவர்களிலும்...
மோதிச் செல்வதை நம்மால் உணர முடியும்.

நான்காம் கவிதை...திருமணம் என்னும் புதிய உறவில்....பழைய உறவுகளை இழந்துவிடக் கூடும் என நினைக்கும் பெண்ணின் பயத்தைக் கவிதையாக்கி இருக்கிறார் ரோஷான். அவளின் விருப்பம் அறியாமல், நிச்சயிக்கப் படும் திருமணத்தில் தான் பலியாடாக மாற்றப்படுவதை உணர்கிறாள் அந்தப் பெண்...காலம் காலமாய் நிலவும் பெண்களின் நிலையை....அழுத்தமாய்ச் சொல்லும் இந்தக் கவிதையை....

இந்தப் புதுப் பயணத்தின் தூரத்தை யாரையாவது
அளவிட்டு சொல்லச் சொல்கிறாள்...அந்தப் பெண்...

எதற்கெனில்...

தன்..."கனவுகளையும், எதிர் பார்ப்புக்களையும்
இங்கேயே புதைத்துவிட்டுப் புறப்படுவதற்கு?"

ரோஷானின் ஐந்தாம் கவிதை...நம் வாழ்வின் மேற் பூச்சு நிறைந்த படடோபங்களைச் சொல்கிறது.
ஒழுங்கற்று...சிக்கல்கள் நிறைந்த வாழ்வைக்..
காலம் மிருகமெனத் துரத்துவதைச் சொல்கிறது . மனிதர்களெல்லாம் "முட்டை வாசி"களாக இருக்கும் இந்த நாட்களை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார் ரோஷான்
தனதிந்தக் கவிதையில். ரோஷானின் ஆறாம் கவிதை ஏழையின் வாழ்வைச் சொல்கிறது.பதினாறு ரூபாய்க்குள் ஒரு நாள் வாழ்வை முடித்துக் கொள்ளச் சொல்லும் அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்கும் யாருக்கும் பொருத்தமானதுதான் இந்தக் கவிதை.

"நங்கூரமிட்டும்
தள்ளாடிக் கொண்டிருக்கிறது...
தோணி...
மீனவனின் குடும்பத்தைப் போல்..."

நம்மில் பெரும்பாலோனோரின் வாழ்வின் நிலைமை இதுதானே. முதல் தேதியில் பூக்கும்
கண்கள்...முதல் வாரத்திலேயே மடிந்து விடுபவைதானே. எதிர் நீச்சலாய் இருக்கும் வாழ்வு...களைத்துக் கண் அயர்கையில்...

"கூடை கூடையாய்...
வண்ணத்துப் பூச்சியின் நிறத்தில் கனவுகள்"

நாள் கழிவதே பெரும்பாடாய் இருக்கையில்...
திருவிழாக்கள் வந்து விடுகின்றன.

பசியின் வலை பரவும்...காலக் குளத்தில்...
திறந்த வலையின் கண்களினூடே
கலைந்து சிதறுகிறது....ஏழையின் புத்தாடைக் கனவுகள்...
வாழ்க்கைக் குளத்தின் படுகைகளில்...

பசியின் வலை பரவிய வாழ்க்கையில்...சிக்கிய மீனாய் இருக்கும் வாழ்வின் துயரத்தை, கனவுகளின் நிறைவேறாத ஒளிச் சிதறலை...
ஆடும் தோணியிலிருந்து தப்பி...தரை தட்ட விரும்பித் தவிக்கும் மனதை...கசியும் வார்த்தைகளால் எழுதி இருக்கும் ரோஷானின்
கவிதை மனத்தின் அன்பு....பெரும் கவிஞனுக்கு மட்டுமே உரியது.விலை பேச முடியாதது.

தன் ஏழாம் கவிதையிலும்...எட்டாம் கவிதையிலும், பூக்களையும், விருட்சத்தையும்
பேசும் ரோஷான்...அதிலிருந்து மனிதர்கள்
கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை எடுத்துரைக்கிறார்,பூக்களையும், விருட்சங்களையும், மனிதனை நேசிக்கச் சொல்லும் ரோஷான்...சுயநலங்களால் வடிவமைக்கப் பட்ட நம் முகங்களை...எப்படி
அடையாள படுத்திக் கொள்வது?...என்ற கேள்வியுடன் முடித்திருக்கிறார்.

மொத்தம் எட்டுக் கவிதைகள்...எட்டும் எட்டுத் திசையிலும் பரவ வேண்டிய கவிதைகள்...

வாழ்வின் ஆதூரங்களை, தலை சாய்க்க விரும்பும்
விருப்பத்தை...வாழ்வின் நிதர்சனமாய் (பெரும்பாலும்...பெரும்பாலானோருக்கு) இருக்கும் தோல்வியை...வருத்தங்களை...தொகுப்பின் மூலமாகப் படிக்கத் தந்த ரோஷானுக்கு
என் நன்றிகளை மீண்டும் சொல்லி...

புதிய கவிஞரின் புதிய கவிதைகள் குறித்தான

எனது கருத்துக்களை...மீண்டும் தொடர்வேன்