வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!



 
பசி மறந்து,துயில் துறந்து
பாவக்கறை களைந்து
பரி சுத்தம் ஆனவராய்
பன்பாலே சிறந்தவராய்
ஒருமாசம் முழுக்க
உண்ணா பகல் கழித்த
மகத்துவ நோன்பின்பால்
மன்றாடி யா இறைவா
நேசக்கரம் நீட்டி நினைந்தழுது
நெஞ்சுருகி பிரார்த்தித்த
உலகத்து முஸ்லிம்கள்-நாம்
ஒன்று கூடி இப்பொழுது
"ஷவ்வால்"தலைப்பிறைக்காய்
சங்கமித்து நிற்கின்றோம்

"அல்ஹம்து லில்லாஹ்"
"அல்லாஹ்"பெரியவனே!
நாங்கள் உனக்காக
நாவிற்கு விலங்கிட்ட
மாதத் தவத்தை
மா பெரியோன் உன்னிடத்தில்
கையளித்து விட்டோம்
கறையிருப்பின் பெருமனதாய்
ஏற்றுக்கொண்டு இறைவா-எம்
ஏடுகளை நிறைத்திடுவாய்

சுவனத்து பூஞ்சோலை
சோபனத்தை அடைவதற்காய்
அவனியிலே உழைக்கின்ற
அடியார்கள் அனைவருக்கும்
முஸீபத்தை போக்கி-நல்
மூமின்களாக்கி
'பரக்கத்தை' ஈந்து
படியளப்பாய் 'ரஹ்மானே'

சட்டம் சொல்வது போல்
'ஷக்காத்' கொடையளித்து
அன்பு உறவுகளை
ஆதரவால் அலங்கரித்து
புத்தாடை தரிப்பித்து
பூ மணம் பூசி நன்று
பெருநாள் எடுக்க
பேராவல் கொண்டுள்ளோம்
எங்கள் அனைவரதும்
இதயத்து பிரார்த்தனையை
ஏற்றுக்கொண்டு நீ
எம் வாழ்வில் மாற்றங்கள்
காட்டிக் கபுலாக்கி
கரை சேர்ப்பாய்"யா அல்லாஹ்"