திங்கள், 31 மார்ச், 2014

மலையேறும் கொழுந்துக் கூடைகள்.



வெற்றிடத்தின் கனதியால்
பின்னப் பட்டிருக்கிறது
மிக நேர்த்தியாய் வாழ்வின் கூடை

முதுகின் முகடுகளில் இருள் பிரிய
இருப்பை தக்க வைப்பதற்கான
பிரயத்தனங்களால் புலர் பொழுதுகள்
இரத்தம் உறுஞ்சி அட்டைகள் கொழுக்க
இரக்கம் குறைந்து சேட்டைகள் வலுக்க
கங்காணியின் கண்காணிப்பில்
இயலாமையின் தினப் பதிவு

துளிர் கொழுந்துகளின் இடையில்
நிறுபடுகின்றது தினக்கூலி
வெட்டுக் குத்துகளுக்கு நடுவில்
வேதனைக்குரிய வேதனம்
சாதத்திற்கு போதுமாகி
சமையல் உலையென கொதிக்க
பொங்கியெழும் பசிவயிறு
பூசி மெழுகப் படுகின்றன
கஞ்சிக் கலவைகளால்
கால் வயிறு,அரை வயிறாய்

மனம் விரும்பும் மாற்றுத் துணிக்கு
பண்டிகை வரும் வரைக்கும்
ஆடை விரதம் இருக்க வேண்டிய
அநியாய விதி
வீடெனும் கனவுவேறு
ஒரு செங்கல்லுக்கேனும் பெறுமதியற்று
உடைந்து கலைகின்றன
பனி படர்ந்த பச்சிலை காடுகளில்...

இப்படியே முதிர்ந்த ஜீவிதம்
வாழையடி வாழையாய்
கிளையென துளிர்க்க
ஒழுகி கரையும் லயங்களில்
தள்ளாடுகின்றன பரம்பரை
மோட்சம் அற்ற மொக்கைகளாக
பல கோடி ஆயிரத்தி ஓராவது
பகலையும் தாண்டி!



வியாழன், 27 மார்ச், 2014

எனது மரணம்.









உடை வாளை
இறுக்காத சரணகதியும்
உயிர் வாழ கேட்கின்ற
இறுதி நிலையுமாய்
அமையும் அத்தருணம்

நிகழ்கால நிரலொன்றின்
நிச்சிலப் பொழுதொன்றில்
நிமிடத்திற்கும்
வினாடிக்கும் இடையில்
கண்காணிப்பை மீறி
கணிக்கப் பட்டிருக்கும் அந்நொடி

யார் பிடித்து வைத்திருப்பாரோ
யாருக்கும் தெரியாது
உள்ளிழுத்த காற்றை
வெளியேற விடாத வேளையாய்
சம்பவிக்கும் அச் சடங்கு

உடன்கட்டை ஏற என்னுடன்
ஒப்புக்கொண்டவள்
உயிர் கட்டை இறங்க
தப்பிக் கொண்டவளாய் தள்ளி நின்று
ஒப்பாரியை ஒப்புவிப்பாள் ஊருக்கு

பிள்ளைப் பாத்திரங்கள்
பிரிந்த மாத்திரத்தில்
கண்கள் பனிப்பார்கள்-கொஞ்சம்
கவலை தொனிக்க

சக சொந்தங்கள்-என்
சா முன் குறை மெழுகி
அனுதாப பூச்சுகளால்
அநியாயத்துக்கு வெள்ளையடிப்பர்

பெயர் மறந்த ஊர் பிரியத்தின் பேரால்
“மையத்து”அல்லது பிணம் என்று
மகுடம் சூட்டுவர்

ஊர் வலமாய் வரும்-என்
உடல் வளம் கைமாற
நான் ஆக்கிரமித்த மண்
என்னை ஆக்கிரமிக்க
வாய் பிளந்து
வழிபார்த்து காத்திருக்கும்.






திங்கள், 3 மார்ச், 2014

தலை துவட்டும் மழை அரசி.

நீர் நேசத்துக்குரிய நெசவாளி

நூதனமாய் வான் ஏறி
‘நீர்’ நூல் திரிக்கவும்
நிதானமாய் தரையிறங்கி
‘வெள்ள’ஆடை  தரிக்கவும்
மழைக்கு மட்டுமே சாத்தியம்

பயிர்களை வாசிக்கவும்
உயிர்களை நேசிக்கவும்
தாகித்தோரை யோசிக்கவும்
பழகியிருப்பதால்
நீர் பொய்க்காத உண்மை
புடம் போட்ட வெண்மை

கடலில் குளித்து
வானில் தலை துவட்டும்
வல்லமை பெற்ற மழை அரசி
நீர் வராத உருக்கு மோட்சமில்லை
ஏன்-நிழல் என்ற முகவரி கூட இல்லை

கீழிருந்து மேலாகவும்,
மேலிருந்து கீழாகவும்
இடமிருந்து வலமாகவும்
வலமிருந்து இடமாகவும்
வெற்றிடங்களை நிரப்பி விடுவதால்
தண்ணீர் வாக்கியங்களால் நிரம்பும்
நீர் குறுக்கெழுத்துப் போட்டி
காற்று வந்து உன்னுடன்
கை கோர்க்கின்ற போதுதான்
குளம்மி வரும் கட்டங்கள் வந்து
குழப்பி விடுகின்றன

வேர்களுக்கு நீர் பூக்கொடுத்து
விருந்து வைக்கவும்
விரல்பிடித்து தளிர் தரித்து
நிலை நிறுத்தி நிற்கவும்
மழை நீர் உம்மால் மட்டுமே
நிதர்சனமாகிறது

மழைக்கு ஏழைகள் எங்கள் மீதே
எப்போதும் இரக்கம் அதிகம்
அதனால் தான்
அடிக்கடி கூரை வழி இறங்கி
குசலம் விசாரிக்கின்றது
எங்கள் தரிசுகளின் தலைகோதி
தானியக் குருத்துகளுக்கு நீர்தூவி
பூவலங்காரம் செய்து
புன்னகைப்பதால்தான்
நாங்கள் இன்று
மனிதம் தொலைந்த மண்ணில்
கொடுமையின் கோடையில் நின்று
துளிர்க்கிறோம் உன் துணையால்

கடலில் குளித்து
வானில் தலை துவட்டும்
மழை அரசியே
நீர் முத்து களை சிந்தி விடுகிறாய்
சொத்துக்கள் பொருள் கூடி
வித்துகள் வெடிக்க
நிரந்தரமாய் தங்கிவிடாமல் வந்து போ
வரண்டு கிடக்கும்
எமது மேய்ச்சல் நிலங்கள் வளம் பெற