புதன், 22 ஏப்ரல், 2015


உடையும் கடல்!





அழகான முற்றத்தில்
குரோட்டன் செடியுடன் வளர்ந்து
சமீபமாக இருந்த சந்தோசம்தான்
பாறைகள் முளைத்திருக்கும்
நேற்றைய காலத்தின் தெருவழியே..
பருவங்கள் என்ற பதங்களுடன்
கடந்து போனது என்னை.

அவர்கள் குருடாய் இருந்ததால்
அது போகட்டும் என்று விட்டு விட்டேன்

இன்று நானாக திரும்புகிறேன்
மயானம் இருக்கும்
இப்போதைய சாலைக்கு.
ஆமணக்கும்,சப்பாத்து கள்ளியும்
செறிந்த திடலில்.....,
நானும் ஒண்ட வேண்டியாயிற்று.

சுவர்க்கம்,நரகம் கேள்வி ,கணக்கு
எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்
மரணிப்பதற்கு மட்டும்
இங்கு மனிதர்கள் தயாரில்லை.


மயானத்திற்கு செல்ல
விருப்பமற்றவர்களின்
பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படுகின்ற
பின்னிரவொன்றில்...........,

வானவெளி எங்கும்
என் எதிர்பார்ப்பை கூட்டி,கழித்து
பெருக்குகின்றன கரும் முகில்கள்
மண்பற்றி,வேர்நிறுவி,கிளைவிட்டு
நிழல் விரித்து 
இலை தரித்து,பூ ஈன்று காய்விட்டு
பழுத்துவிழ என
ஒரு சாக்கு கனவுகள் இருக்க

பாறை பெருவெளியில்
முள்சூழ முளைத்திருக்கும்
கிளையற்ற கள்ளிகளுடன் கள்ளியாய்
நிலையற்ற என் வாழ்வும்
காற்றும் முனைவதில்லை சீண்ட..

 பெரும் மூச்சுகளால் நா வரண்டு
தனித்தலைந்து
வாலிப கரையில்
வாடியிருக்கும் என் அருகே
இடி வெட்டி,மின் கொட்டி
வானக் கூரை வழியிறங்கி
அன்மித்து உடைந்து
கலக்கும் கடலை
மழை என்கின்றன
கல்லாய் இறுகி இருக்கும்
மண்ணாங் கட்டி மனசுகள்!




தவற விட்டவைகள்.


தூரத்தில் நின்ற துயில்கருவறையில் வைத்து விட்டு
“கபுறறைக்கு”(கல்லறைக்கு) போன வாப்பா
தவழ்ந்து புரண்டு
தாவி உறங்கிய தாய்மடி
பாலியம் காணாமல் பாடையேறிய
பள்ளித்தோழி
இடம்மாற்றம் கிடைத்த பின்
இதுவரை சந்தியா ஆரம்ப ஆசான்
பட்டினியாய் படுத்த இரவுகளில்
அருகிருந்து அனுபவிக்க கிடைக்காத
என் குழந்தைகளின் குறும்பு
நனைய காத்திருந்த மழை
பொழியாமல் போன தருணம்
நகரப் பேரூந்து பயணத்தில்
என் மணிபர்சுடன் இறங்கிப் போன
பக்கத்து இருக்கை பயணி
அநாதரவாக நின்றபோது
ஆதரித்த முன் அனுபவம் அற்ற முகம்
வாழ்கை என்று வந்தபின்
இறக்கை கட்டிப் பறந்த இருபது வருடங்கள்
இன்னும்......,
சேமிக்க முடியாமல் செலவுபோன
சில்லறைகள்
என் “கபுறறை”(கல்லறை) வரைக்கும் நீளும்
கவலை சிலுவைகளாய்!

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

இடிவிழுந்த ஒரு காலை!













புள்ளினங்களின்
புனிதநீராட்டு விழாவுடன்
ஆரம்பித்து இன்முகத்தோடு
அழைத்துவந்து வாசலில் விட்ட
அதிகாலை
விடிகாலையாகி,
வெயில் காலையாகிய போதுதான்
உருக்குலைந்து
அடையாளம் காணமுடியாதபடி
இடர் காலையாய் பேர்
இடி விழுந்து நின்றது என் தெருவில்

வாலி என்ற பெருங்கவிஞன்
வலிகளுக்கிடையில் வந்துபோனான்
காதலில் வெற்றி கண்டால்
கழுத்தில் கயிறு தொங்கும்
காதலில் தோல்வி கண்டால்
கயிற்றில் கழுத்து தொங்கும்”

ஆனால் இங்கு
வாழ்க்கைக்குள் வந்து
வாரிசுகள் கண்டபின்பு
உள்ளிருக்கும் சந்தேக குப்பைகளை
வெளியே பெருக்க முடியாமல்
வாசலை விட்டு சில வீடுகளே
வாஸ்த்து சரியில்லை என்று
பூமிக்குள் புதைந்து விடுகின்றன

சாலையோரங்களை
அழகுபடுத்திய மரங்களை அணுகி
பூக்களை ஒவ்வொன்றாய்
வினயமாய் விசாரித்தேன்
காலைக்கு நேர்ந்த அபத்தம் பற்றி
அறியும் முனைப்பாய்

யாரிடமும் ஊகத்தை தவிர
உண்மை இருக்கவில்லை
கயிற்றுக்கும்,கழுத்துக்கும்
தெரிந்த ரகசியத்தை
படித்துப் பார்க்கும் பக்குவம்
முகமூடிகள் தரித்த மனித
முகங்களுக்கு
தெளிவில்லை என்ற போது
இடி இரண்டாவது முறையாய்
இறங்கியது அத்தெருவில்

இறகுகளை உதிர்த்துவிட்டு
உயிரை காவுகொடுத்திருக்கிறது
அந்த வெண்கொக்கு
அதன் குளத்தில் ஈரமில்லை
சேறும் இறுக வெறிச்சோடிற்று
மதம் வெடிக்க

பூமியின் மார்பு தவழ்ந்து
காற்றில் அசைகின்றன அதன் இறகுகள்
ஊரின் விழிகளெல்லாம்
கரைந்தபடி இறங்கி நடந்தன
இடிவிழுந்த காலையில்
நான் வாழை சுருட்டிக்கொண்டு
ஒரு பூனையாய் இருந்தேன்
எனது மலத்தை மறைத்தபடி
கண்களை மூடிவிட்டால்
உலகமே இருளென்ற
இறுமாப்பு இன்னும் இருக்கு....

அடுத்தமுறை இடிவந்தால்
அவனில் விழும் என்ற
ஒரு பாட்டியின் சாபம்
என்னை கடந்து செல்கிறது

(அன்மையில் தற்கொலை செய்துகொண்டதாக தவறிப்போன ஒரு தங்கைக்காய்.)

ரத்த சரித்திரம்.




தெருக்கோடியில் வளர கூட
தெளிவு முளைக்காத என்னை
உன் தொப்புள் கொடியில்
மலர வைத்தாயே
மகிழ்கிறேன் தாயே?
அதனால்தான் சொல்கிறேன்
நீ ஆதாரம்,நான் சேதாரம்
.........................................,
ஆயிரம் தான் இருந்தாலும் அம்மா
உனக்கு முன்னால் நான்
ஒன்றுமில்லை வெறும் சும்மா

கதையாய் சொல்ல நீ
முத்த காவியமல்ல
சதையாய் உள்ள
உயிர் சாசனம்
சிறு விதையையும் சீராக்கி
தானியமாய் தருவிப்பவள்
நீ வளர்க்கும் வயல்வெளி
நான் உலரும் பனித்துளி

நீ மலை முகடு
நான் இலைச் சுவடு
காலமெல்லாம் உயிரூட்டி
நீ வேராக இருக்கின்றாய்
ஆனால் நான்
உன் காலடியில்
ஒருநொடி சருகாக கிடக்க கூட
சம்மதிப்பதில்லை

ஆறாத காயத்தையும்,
அழ வைக்கும் கவலையையும்
பிறப்பிலிருந்தே நான் உனக்கு
பிரதிபலன் ஆக்கிவிட்டேன்
கைமாறு எதிர்பாரா
கருணை ஆனாய்
காலத்தின் முன் நிற்க
பொருள் நீயானாய்
நீ புழக்கத்தில் இருக்கும்
நாணயம்
நான் பழக்கத்தில் வெறுக்கும்
செல்லா காசு

ஆயினும் என்னை
பொற்காசு புதையலாய் புகழ்கிறாய்
உயிரூட்டி,உயிரூட்டி மகிழ்கிறாய்

அதனால்தான் சொல்கிறேன்
நீ ஆதாரம்,நான் சேதாரம்
ஆயிரம் தான் இருந்தாலும் அம்மா
உனக்கு முன்னால் நான்
ஒன்றுமில்லை வெறும் சும்மா

அம்மா நான்
உனக்கு வலிகள் சேர்த்த
சுத்த தரித்திரம்
அம்மா நீ
எனக்கு வரமாய் வாய்த்த

ரத்த சரித்திரம்.