புதன், 19 டிசம்பர், 2012

அது வரும்...!



 ஒரு பறைவையின் இறகு 
உதிர்வது போல்
ஒரு பூவின் இதழ் விரிவது போல்
சிறு பசியில் குழந்தை
அழுவது போல்
பெரும் நிசியில் மௌனம்
நுழைவது போல்
அது வரும்

இருண்ட வானம் கலைவது போல்
மிரண்ட காளை அலைவது போல்
மூர்க்கத்தனத்தின் பிரளயத்தோடும்
பார்க்க இயலா பரபரப்போடும்
அது வரும்
தவணை கேட்க மறுத்த நொடியாய்
தலையணையோடு சரித்த படியாய்
தாலாட்டு கேட்டு சிரித்த வடிவாய்
தாயவள் வயிற்றில் தரித்த படியாய்
அது வரும்


துயரத்தின் உயரத்தையும்,
நீளத்தின் ஆளத்தையும்
வாழ்க்கையின் கோலத்தையும்
அறிந்துணர்ந்து மனிதன் ஆராய
அது வரவேண்டும்
அது வந்தால் தான்
வாழ்க்கையின் மெய்,பொய்
இரண்டையும் இனம் பிரிக்க
ஏதுவாகும் இருப்பவனுக்கும்,
மண்ணுள் செரிப்பவனுக்கும்
அதனால் அதுவரும்
நீங்கள் அழைக்காமல்
மரணம் என்னும்
மலர்செண்டு கொண்டு
உங்களை அடைய அது வரும். 



மருதாணி புள்ளிகளும் உன் வெட்க சிரிப்பும்.



சாலையோர சந்திப்பில்
கண்களால் கடந்து 
சிரிப்பால் நீ..
நட்சத்திரங்களை உதிர்த்துவிட்டாய்
எனக்குள் பௌர்ணமிகள் உதித்தன
கனவுகளின் சொற்காதேசத்துக்கு
கைகோர்த்து என்னை
அழைத்து செல்கின்றன..
உன் வெட்கம்.

அன்பே.....
இறந்து இன்னுமொருதடவை
பிறக்கலாம் போலிருக்கிறது
உன்னை அணு,அணுவாய் தரிசிக்க

மருதாணி புள்ளிகளுக்கிடையில்
சிவந்துகிடக்கும் உன் எழில் கண்டு
பூக்கள் இனி பொறாமைப்படும்
உன்னிடம் தோற்க விரும்பாத
குயில்கள் இனி ஊமையாக உலவும்
மோட்சமடைந்த உனது
கால் கொலுசின் சிணுங்கல்களில்
பறவைகளின் பாடல்
தினம்,தினம் என்னை
தவிப்பிலாழ்த்தி தாலாட்டுகின்றன

ஓடைகளில் உலவி தாவிக்குதிக்கும்
மீன்களுடன் விளையாட துடிக்கும்
மனசு என்னுடையது
இன்று உன்
பூப்பெய்திய புன்னகையின் பின்
மனசும்,வயதும் ஒன்றாய் இணைந்து
ஒற்றை வரவுக்காய்
இரட்டைத்தவம் இருக்கிறது

வந்து போ என் வாசல் பக்கம்
காதலிக்க வேண்டாம்-ஒரு
கைகுலுக்கலாவது  தந்து
நீ வாழும் ஊரில் வசிப்பது
எனக்கு
பெருமைக்குரிய பெறுபேறு.