ஞாயிறு, 13 ஜனவரி, 2013

நமது வானத்தின் கீழ்!



  1. "யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்"



    இரத்தத்தில் துவட்டிய அடையாளங்களுடன் அநாதரவாக அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் எச்சம்.மெழுகின் ஒளியில் மின்னி மறையும் சுவடுபோல் ஒரு இனம் வாழ்ந்து அழிந்த தீவு வெறிச்சோடிய வரண்ட பாலையாய் திரைமறைவில்.எதுவும் நிகழாததுபோல் எந்த சலனமுமற்று வேடிக்கை பார்த்தபடியிருக்கும் ஒரு சோக சூரியன் என நம் கண்முன்னே நடந்த பேரவலத்தை தொக்கி நிற்கிறது "யுத்தத்...தின் சுவடாய் நான் மட்டும் போதும்"பன்னாட்டு படைப்பாளிகளின் படைப்பு நூல் அட்டை. தி.அமிர்தகணேசன் என்ற அகன் அவர்களின் ஆழுமையை பறைசாற்றியபடி விரிகிறது நூலின் பக்கங்கள்.

    எசேக்கியல் காளியப்பன் அவர்களின் அருமையான வாழ்த்துடன் ஆரம்பித்தாலும் அனைவரையும் அழைத்து செல்கிற பக்கம் அணிந்துரை.திறனாய்வின் தேர்ந்த புலமையை மிக எளிமையாகவும்,அழகாகவும் 'பரவசப்படுத்தும் யாரையும்'எனும் மகுடத்தில் மதிப்பிற்குரிய க.பஞ்சாங்கம் ஐயா கூறியிருக்கும் கருத்துக்கள் வாசிப்பவர்களை வேறொரு தளத்திற்கு அழைத்து செல்கின்றன."
    வாசகர் நோக்கில் அனுபவம்... என்று மு. ராமச்சந்திரன் தமிழ் மொழியைத்தாண்டி சமூகப் பொறுப்புள்ள வலுவான வரிகள் தன்னை வெகுவாய் பாதித்ததாக கூறியிருப்பது படைப்பாளிகளுக்கும்,தொகுப்பாளிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.

    நோக்கவுரை எனும் மகுடத்தில் பொள்ளாச்சி அபி வாழ்க்கையின் ஒரு பகுதி காதலென்பது பொய்,காதல் மட்டுமே வாழ்க்கையெனக்கருதும் சிலருக்கு சாட்டையை வீசியிருப்பது அடித்தளும்பாய் தெரிகிறது.இன்றைய நிலையின் தேவையுணர்ந்து எழுதும் சிலரை சுட்டுவித்து அடையாள படுத்தியிருப்பது ம், இன்னும் எழுத புதிதாக தளத்திற்குள் தம்மை இணைக்கும் கவிதா நெஞ்சங்களை நோக்குணர்ந்து ஆக்குவோம் இலக்கியம் என்ற தொனியில் நல்ல கருத்துக்கள் பகிர்ந்திருப்பது ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்போல்.

    இதற்கெல்லாம் நல்ல மனசு வேண்டும்.அந்த வகையில் நிரூபித்திருக்கிறார்கள் அகனும்,அபியும் நூலாக்கம் என்பது பேச்சுவாக்கிற்கு இலகுவாகி விடுவதுபோல் நடைமுறைக்கு எளிதாய் சாத்தியப்படுவதில்லை.தானுண்டு,தன் வேலையுண்டு என ஒதுங்கிக்கொள்ளும் மனசுகள் வாழுகிற உலகத்தில் உயர்ந்து விட்டார்கள் சிகரம்போல்.
    மருத்துவர்,இலக்கியகர்த்தா,ஆய்வாளர் கவிஞர் என பல முகங்களுடன் இளையவர்,முதியவர் என்று யாரையும் முகம் பிரிக்காமல் நட்போடு பழகி குறை,நிறைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி எம்முடனும்,எழுத்து தளத்துடனும் இணைந்திருக்கும் மருத்துவர் ஐயா வ.க.கன்னியப்பன் அவர்களின் வாழ்த்து படைப்பாளிகளுக்கு கிடைத்த தோள்மாலை.
    ஊதுகுழலென்னும் ஊக்குவிப்பு ...அகன் என்னும் தி.அமிர்தகணேசன் அவரது இலக்கிய பணியின் சந்தித்த இடரையும்,கவிதையுடன் கிடைத்த தொடர்பையும் நம்பிக்கை தரும் நட்புள்ளங்களையும் விலாவாரியாக பதித்திருப்பது அவரடைந்த வெற்றிக்கு பறை! தளம் நுழைவும்,பிரசவ வலியும் என்பதுபோல் இலக்கியம் அதிலும் கவிதை இலகுவான பாடுபொருள் எதையும் பாடும் அருள்! அதனால் அவர் சாதித்து விட்டார். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செயல் படுபவர்கள் சிலரைத்தான் அடையாளப்படுத்த முடியும் அதில் நமக்கு தெரிந்தவகையில் இவர் என்றால் மிகையாகாது.
    யுத்த சுவடின் தடங்களாய்.....
    சீர்காழி எழுத்து சுறாவளியின்-முதல் வணக்கம், ஆண் மிருகங்கள். புதுவைகாயத்திரியின்-தமிழில் பேசு,
    மயிலாடுதுறை ரமேஷாலம்-அவர்களின் அகதி மரம், எனக்கென்று ஒரு கனவு இருந்தது, முகம், என் தோட்டத்துச் செடி, எதுவாய் இருக்கக் கூடும், விடை அற்ற ஒரு வரலாறு, நீ வரும் நாளுக்காக.., பனிரெண்டாம் வகுப்பின் காலம்.
    இரா அருண்குமாரின்-குழந்தைகள்!
    பாரதி சரணின்-இயற்கை.
    பொள்ளாச்சி அபியின்-வழிகாட்டி, ஏண்டா இந்த கொலை வெறி, ஒரு மனக்குமுறல், மனசு துடிக்குது..!
    இலங்கை-பதுளை கலைஞானகுமாரின்-கடல் துளிகள், வரமாக கிடைத்த சாபம்!,
    தச்சூர் நிலா சூரியனின்-யார் தீவிரவாதி?, உண்மையான வாழ்க்கை.
    சோழவந்தான் புலமி அம்பிகாவின்-கவிஞனின் வாழ்வு,
    இலங்கை-ரோஷான் ஏ.ஜிப்ரியின்-குளத்தை நினைந்தழுத...., என் ஆடுகளை தின்ற கிராமம், யாதுமாகிய நீயே தாயே!, தப்பித்து வந்தவனின் மரணம்.
    இலங்கை-அரசு பாரதியின்-பேசப்படாத துயரங்கள்.
    சிங்கப்பூர்-அகமது அலியின்-மீனவன் பா(ட்)டு, உயிரென்பது துச்சமாக.
    முத்துநாடனின்-எங்கள் விடுதலைதான் வீழ்ந்ததெங்கே? நான் பார்த்ததிலே..
    கே.சரவணனின்-சன்னல்கள்.
    நெல்லை நா.ஜெயபாலனின்-நானும்தான் தேடுகிறேன்.
    இலங்கை-கிளிநொச்சி அகர முதல்வனின்-அத்தருணத்தில் பகை வீழ்த்தி, மீறலின் தர்மம், எம் உடலெரியும்தாய் நாடு.
    இலங்கை-மட்டக்களப்பு ஹே.பிரியாவின்-"யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்", திருமணதிற்காய் ஒரு பெண் காத்திருக்கிறாள்.
    ருத்ரா நாகனின்-அறிவியலின் அனுதாபம்.
    தஞ்சை-விநோத்கண்ணனின்-இரட்டை வரி நோட்டு.
    நிலக்கோட்டை-யாத்விகா கோமுவின்-அம்மா நீ=கடவுள்.
    அமுதா அம்முவின்-வேண்டாம் சாமி இன்னொரு பிறப்பு.
    பரிதி.முத்துராசனின்-நாசாவின் எந்திரப் பூச்சி.
    தென்காசி-யாசிர் அராபத்தின்-வேண்டுவன கொண்டுவா பாரதமே!
    மணவாசல் நாகாவின்-ஈழவனும் மீனவனும், சடலத்தின் சபதம்.
    நெல்லை மோசேவின்-அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது.
    கோவை-ஹரி ஹரி நாராயணனின்-மகா கவிக்கு சமர்ப்பணம்.
    மதுரை-தமிழ்தாசனின்-கண்டிக்கத் துப்பில்லாமல் கவிதை எழுதுகிறேன்.
    லண்டன்-கிரிகாசனின்-இழி பிறவி.
    இலங்கை-ஷாஜஹானின்-என் இந்த மௌனம்?
    நாகர்கோயில்-ஈஸ்வர் தனிக்காட்டுராஜாவின்-புதியதோர் நாடு காண்போம்.
    வசந்தி மணாளனின்-இதயத்தில் சேமியுங்கள்.
    திருப்பூர்-இன்போ அம்பிகாவின்-தூய நின் சேவடி போற்றுதும்...
    நெல்லை-பொற்செழியனின்-எரிமலை வெடிக்கும் என எச்சரிக்கை விடு.
    மதுரை-வா. நேருவின் –மதத்தின் அளவு மட்டுமே.
    புதுச்சேரி-அகனின்-தோழனின் பிரிவு.
    என நீளும் ஒவ்வொரு படைப்பாளியின் படைப்பிலும் உயிர் இருக்கிறது. நம்மிடமிருந்து காவுகொள்ளப்பட்ட வாழ்வின் எதிர் பிம்பம் மீழ் பரிமாணம் கொண்டிருப்பது எழுத்துக்கு கிடைத்த பெருவெற்றி.

    விவசாயின் ஏக்கம், மீனவனின் துயரம், தாய்மையின் பிரிவு,வாழ்வியல் அவலமாக நீண்டு நம்மை திரும்பிப்பார்க்க வைக்கிறது.
    சிறுபான்மை மீதான நியாயப்படுத்த முடியாத வன்முறைகளும் இலங்கையில் வெறிகொண்ட பேரினவாதம் வளர்த்துவிட்ட போர்க்காலம் இழைத்துச் சென்ற துரோகங்களின் தீராக் காயங்களுமே ஒவ்வொரு வரிகளும் எம்மண்ணின், எம்மக்களின் கண்ணீரிலும் குருதியிலும் ஊறவிட்டு வெளிக்கொணரப் பட்டிருப்பதனாலோ என்னவோ அவற்றை வெறும் கவிதை வரிகளாக என்னால் வாசிக்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் இவ்வின வன்முறையின் கோரச் சிதைவுகளின் நேரடி சாட்சியங்களாய் நாமும்கூட இருந்தோம் அல்லவா? எல்லைகளை தாண்டியும் அது பிரதிபண்ணப் பட்டிருப்பது ஆறுதலான அடையாளம். இனியாவது காயங்களை மருந்தாக்கிபுது மாயங்கள் செய்வோம்.(விசேடமாக தயார் செய்த பிரதியில் அச்சாகாமல் பக்கங்கள் உள்ளது கவனித்திருக்க வேண்டிய குறி!)
    அனைவருக்கும் புனித தைப்பொங்கல் வாழ்த்துக்கள் பகிர்ந்தபடி....