வெள்ளி, 21 டிசம்பர், 2012

உயிர் தந்த உறவுக்காரி.




உயிர் தந்த உறவுக்காரி.
பாசமுடன் தாயவளோ பிசைந்து விட்டாள்
பாத்திரமாய் பாரினிலே ஆக்கிவிட்டாள்-என்
வாழ்க்கைக்கு சொந்தக்காறி ஆகிவிட்டாள்
வரம் போன்று நான் போற்ற தேறிவிட்டாள்
நற்பண்பு சரிவின்றி தோற்றுவித்தாள்
நான் வாழ்த்த வரியின்றி தோற்கவிட்டாள்
உயிருக்குள் உயிர்வைத்து உயிராக்கினாள்
உதிரத்தை அமுதாக்கி பயிராக்கினாள்
அம்மாண்ணும் உறவாக உறவாகினாள்
அன்புக்கு அவளேதான் நிகராகினாள்
கவனத்தை முழுதாக எனக்காக்கினாள்
சுவனத்தை பாதத்தில் உருவாக்கினாள்
நிலவுக்குள் வழிகின்ற ஒளியாகினாள்-என்
நிழலுக்குள் நெளிகின்ற உருவாகினாள்
அனலுக்குள் குளிர்கின்ற பனியாகினாள்
அழகான தாயென்னும் கனியாகினாள்
என்பார்வை தெளிவாக வழியாகினாள்
எப்போதும் தெவிட்டாத மொழியாகினாள்
பசிக்கின்ற பாத்திரத்தில் ஊணாகினாள்
கசக்கின்ற மாத்திரையில் தேனாகினாள்
பிணிவந்தால் அவளேதான் மருந்தாகினாள்
பிரியத்தில் கடல்போல உரு மாறினாள்
தகுதிக்கு மேலாக எனை நோக்கினாள்
தான்பிள்ளை ஊர் போற்றும் மகனாக்கினாள்