புதன், 29 ஆகஸ்ட், 2012

என் இரவுகளை குடித்த நுளம்பு.


ஒரு சாலையோர சந்திப்பில்
கண்களால் கடந்து போன
அதிபயங்கரங்கள் நிறைந்த நிகழ்வு அது
கனவிலும் எண்ணியிருக்க வில்லை நான்
இத்தனை கவலைகளை தரும்
காரியமாகுமென்று.........

ஒரு தேர்ந்த கவிஞனைப்போல்
இப்போதெல்லாம்
கவிதைகள் எழுதுகிறேன்
விடிவதற்குள் கிழித்தெறிந்தும் விடுகிறேன்
நிலவை பூமிக்கு இறக்கின்றேன்
நட்சத்திரங்களிடம்
நிலவு அழகில்லையென்று
குறை கூறி கோபப்படுகின்றேன்

முன்பு இருந்த முகம்
இப்போது இல்லை என்னிடம்
அமிர்தத்தையே அருவருப்போடு
அணுகுகிறேன்
பசிக்கப்பசிக்க ஒரு பட்டினி விரதம்
எதற்குள்ளும் இறங்காத நான்
இரவுகளுக்காக ஏங்குகிறேன்
இருளுக்குள் தூய்ந்து தேங்குகிறேன்

செடிகளே சேதாரங்கள் பற்றி
சிந்திக்காத பொது
வண்டுகளை துரத்தி,துரத்தி
பூவினை காத்து பூரிப்படைகிறேன்
ஒன்றுமே புரியாத ஒன்று
என் மூளையின் மூலையில்
கூடாரமடித்து குந்தியிருக்க வேண்டும்
இல்லையென்றால் எனக்கு எதற்கு
இந்த வேண்டாத வேலைகள்?

சிந்திக்கத்தெரியாதவன் என்று
நீங்கள் கூட என்னை நிந்திப்பீர்கள்
நூதனமாக நுழைந்து
தினம்,தினம்
என் இரவுகளை குடித்து ஏப்பமிடும்-அந்த
சுடிதார் நுளம்புக்கு புரியும்
இந்த கவிதைக்குள் இருக்கும் சூத்திரம்.