திங்கள், 31 டிசம்பர், 2012

கவரிமான் சாதி..!



நீ...
மரியாதைக்குரிய
மானினம்
வாழ்வோடு போராடி
வசைகளுக்குள் நீராடி
தோற்றுப்போக விரும்பாமல்
உயிர் நீற்றுப்போனாய்-அதனால்
நீ கவரிமான் சாதிதான்.

மோக பிசாசுகளின்
முகமூடி கிழித்து விட்டு
அகம் மூடி மண்ணறைக்குள்
ஆசுவாசம் அடைந்து விட்டாய்

அருமை மகளே
ஆருயிர் சகோதரியே
பரஸ்பரமாயிருந்த
பண்புள்ள தோழியே
விசுவாசிகள் அற்ற ஊரில்
வசித்து சுவாசிப்பதை விட
சாவின் மடியில் சரணடைவது
சாத்வீகமானது என்பதை நீ
சத்தியமாக்கி விட்டாய்

எவரும் ஏதும் சொல்லி
ஏளனம் செய்யாவாறு
உதிர்ந்து உன்புகழை
உயரத்தில் ஏற்றி விட்டாய்
சிதைத்தவர்கள் பதை,பதைக்க நீ
சிகரத்தில் ஏறி விட்டாய்

இதழ் அவிழ்க்கும் முன்னமே
காம்போடு கருகிய-உன்
கனவு மொட்டுகளை,
வாழ்வு பற்றிய
வசந்த சுகந்தங்களை
காவுகொண்ட அந்த
காவாலி கும்பலினை
பலி பீடம் ஏற்ற சொல்லி
பறை ஒலித்து மாண்டு விட்டாய்
இறை இடத்தில் மீண்டு விட்டாய்