வியாழன், 17 மார்ச், 2016









அடர்வனமற்ற
இருப்பின் பால் தனித்து
ஒற்றை கால் தவத்தில்
ஒரு கடிய வாழ்வை
நகர்த்திய பெண் பட்சி

வற்றிய நதிகளின் எல்லைதாண்டி
குஞ்சுகளின் இரைக்காய்
பாலை வெளியேகி
ஆட்டிடைச்சியாயும்
ஊண் தேடியலைந்ததாய்
கேவி அழுதிருக்கிறது என்னிடம்
நான் குஞ்சாய் இருந்த வேளையது

மனசு தாளாமல்
வலியோடு அழுதிருந்தேன்
வேறெதற்கும் வழியற்று நானும்

பின் வந்த காலங்களில்
பசித்திருந்த பொழுதுகளை சேமித்து
சுய அலகின் இறகுகளால்
கூடும் பின்னியது

தன் குஞ்சுகளின் வாழ்வு துலங்கும்
கனவுகளில் சிலிர்த்த
பொழுதொன்றில்
தன் ஆயுள்குளம் வற்ற
கணக்கு வழக்குகளை முடித்து
கரை ஏறிற்று

மீட்சி பெறு கணம்
எம் விழிகளில்
நதிகளை திருப்பி விட்டு
இறுதி விடை வாங்கி
திரும்பி வரா திசை நோக்கி
உயிருதிர்த்திப் பறந்தது
அவ்வெண் கொக்கு.
***********
கடந்த 08-03-2016 அன்று மகளிர் தினத்தில் வலியோ,வருத்தமோ இன்றி

ஓய்வெடுக்க மரணத்தின் மடியில் தலை சாய்ந்து இறையடி ஏகிய என் இளைய தாய் நினைவாக!
 

மலைப் பூவில் அலையும்
மேக வண்ணாத்திகளின் சிறகில்
வளைகிறது நிற வாளின் கூர்”மை”

பின் அந்தி
மேல் திசையில்
மஞ்சள் சோறாக்க
கழுவி துடைத்த வான இலை
கோடை விருந்துக்கு தயாராய்

நட்சத்திரங்களின் கண் பட்டு
ஒளிரும் பிரயாசத்தில்
மின்னி திளைக்கிறது
உப்புநீர் சாலையில் பால்நிலா


சாளரத்தை சாத்தி தாளிட்டு
திரை சீலையை
இழுத்து விட்ட
இந்து சமுத்திர கடல் வீடருகில்
கோடைக்குள் தாகிக்கும் குடியிருப்புகள்


நறுமுகைகள்
பனியில் இதழ் திறக்க
கனவில் பூவுதிர்க்கும் சொற்கவனம்
வேர்படர வாடி தேய்கிறது
அந்திம மடிப்புகளில்

மழையற்ற வெம்மையில்
சமுக பதக்கடைகளின் விளைச்சல்
அமோகமாய் ஆக
சாக்குகளை நிறைக்கின்றன
வெறும் கொந்துகள்

இடைவெளியின்
இணைப்புச் சங்கிலிகள்
கண்ணறுந்து துண்டிக்க
நங்கூரம் விலக
பிடி தளரும் படகாய் அவ்வோடம்

கால காற்றின் பால்
இழுபடுகிறது இருப்பு
பாலையை சமீபித்தபடி


யாரோ விட்டுச் சென்ற
தனிமையின் அருகில் யாரோ

நீர் வற்றிய குளக்கரையில்
அலைந்திருக்கின்றன
பசித்தலைந்த பட்சியின் அலகுகள்

பெயரை எழுதி வைக்காமல் போன
எவரோ ஒருவரின் வாழ்வின் தடம்
ஈரம் காயாமல் இருக்கிறது
மழை விட்டுச் சென்ற
கோடையையும் தாண்டி!