ஞாயிறு, 3 ஜூன், 2012

பசியின் வலை...!



நீரில் எதிர்நீச்சலுடன்...
விழித்தபடி வலையின் கண்கள்

அசரும் நிமிசங்களிலெல்லாம்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களில்
கூடை, கூடையாய்
கனவுகள்!

நங்கூரமிட்டும்
தள்ளாடிக்கொண்டிருக்கிறது தோணி
மீனவனின் குடும்பத்தைப்போல்...

சோர்வு வருகிறகணம்
தரை தட்ட எத்தனிக்கிறது மனசு

சவளை ஊன்றிவலிக்கிற
சாட்டில்
ஓங்கியும் அடித்தாச்சு...
மீனை விரட்டி
சிக்கிய ஒன்றிரண்டும்
ஆமை சப்பிய முள்கூடாய்

இருந்தும்;
ஏதேனும் ஒரு பாடு
மனப்பாரம் குறைக்கும்
புலால் விற்றகாசில்
பொழுது புலர்த்தி
சதாபொழுதை சமாளிக்க!

இடையில் வரவிருக்கும்
பெருநாள் - ஐந்து உசிரின்
புத்தாடை கனவு
வலையின் திறந்த கண்களின் வழியே
பழையபடி கலைந்து சிதறும்...!!
வில்லுக்குளத்தின் படுகைகளில்...!
                                      தினகரன் வாரமஞ்சரி 03 ஜூன் 2012