வெள்ளி, 27 ஜூலை, 2012

எவனோ ஒருவனுக்கு ஏதோ ஒரு யோசனை.



விதையொன்றை பார்த்தாகிலும்
உன்னை விசாலமாக்கு
மழைஈரம் கண்டதும் மண்ணை முட்டி
முளையால் தன் முகம் காட்டுகிறதே விதை
அதுதான் அதன் ஆத்மார்த்த பலம்
உனக்குள்ளும் ஓராயிரம் பலம்
ஒளிந்திருக்கிறது
அமாவாசையிலிருந்து விடுபட்டு
வைகறைக்கு வா

நேரம் உரம் வாழ்க்கை பயிருக்கு வளம்
ஒவ்வொரு வினாடியையும்
ஔடதமாய் அளவிடு
கையாலாகாத்தனத்தை கை விடு
விதிக்கப்பட்ட வாழ்வின் விபரம் படி
மகானாகவோ,மாகாத்மாவாகவோ வேண்டாம்
முதலில் மனிதனாக மாறு-பின் 
புனிதனாகத்தேறு

சிந்திக்கத் தெரிந்திருக்கிறது அல்லவா
அது உனக்கு கிடைத்த சிறப்பு விருது
கவனமாக கையாளு
முடிந்ததைஎல்லாம் படி
முடியாததையும் செய்து பார்க்க முனை
பின்னென்ன
எதையும் செய்து முடிக்க இயலும் என்ற
தெளிவு உன்னை
வெளியிளிருப்போர்க்கு விபரிக்கும்

சலவை செய்யும் பொது கறையும் கரையும்
நீ உன் புத்தியை புடம் போடும் பொது
அது உன் சக்தியின் பலத்தை
சத்தியம் செய்யும்
கடிகாரத்தை கொஞ்சம் கவனி
விநாடி முள்ளால் தானே மணியையும்,நாளையும்
நகர்த்தி விடுகிறது
காலம் சும்மா இருந்தால் சுற்றுமா பூமி?

எறும்பு,தேனீ இரண்டில் ஒன்றின்
கொள்கையாவது உனக்குள் கொண்டுவா
வாழ்க்கை பூ வனமல்ல,போர்க்களம்
வெற்றியை தேடி விரை

மகத்துவம் மிக்க மனிதா
எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளையாய் இராதே
அது சோம்பேறியாக்கும் அன்றில்
கோழையாக்கும்
நீ ஆளப்பிறந்தவன்,புவியை வென்று
வாழப்பிறந்தவன்
சுமைகளை சுகமாக நேசி
தோல்விகளை வெற்றி என்று சுவாசி

ஒரு தோல்வியின் முடிவுதான் உனக்கு
வெற்றியின் விலாசம் தருகிறது
விழத்தெரியாதவனால் எழத்தெரியுமா என்ன
யோசி நல்ல மனிதர்களை வாசி
 காற்றில் தூய்மையிருந்தால் நோய் நெருங்காது
சுவாசத்தில் தூசியிருந்தால் சுகம் திரும்பாது
ஆரோக்கியம் அற்றவனுக்கு
ஆயுள் குறுக்கப்படுகிறது
சுகதேசியின் வாழ்க்கை நீட்டப்படுகிறது
சிக்கல்கள் பற்றி சதா
சிந்தித்துக்கொண்டிருப்பவனே
முடிச்சுகளை அவிழ்க்க முனை

அடுத்தவனுக்கு குழி பறிப்பதை விட்டு,விட்டு
உனது பாதையை சீர்செய்ய சிரத்தைஎடு
ஒருவனாவது உன்னால் உயர  ஒரு படியாகு
இல்லையெனில்;
ஒழுக கற்ருயர்ந்து நீ உருப்படியாகு.

கனவு தேசத்து அழகிக்கு.


நிஷ்ட்டை கலைத்து நெஞ்சு நுழைந்து
நேர் எதிர் வந்தவளே
கொஞ்சு தமிழில் குளைத்துவார்த்தை
கொள்ளை கொண்டவளே
எண்ண இனிக்கும் இன்ப நிகழ்வை
எனக்குள் தந்தவளே
வண்ணக்கனவாய் வாசல் வந்து
வருடிச்சென்றவளே

சிரித்து மயக்கும் பூவாய் வந்து
சிநேகம் கொண்டவளே
சிறுகச்,சிறுக இதயம் தன்னை
சீண்டித்தின்றவளே
வெட்டி வீழ்த்தும் பார்வை கத்தி
வீசிச்சென்றவளே
கட்டியணைத்து காதில் காதல்
பேசிச்சென்றவளே

அறிமுகமான முதல் நாள் இரவே
அழைந்து கொண்டவளே
மறைமுக மாகி வாழ்வுமுளுக்க
மனதைத் தின்றவளே
முத்துப்பற்கள் கண்ணுக்குள்ளே
மோதிச்சிதறுதடி
கொத்துப் பூக்கள் சூடும் கூந்தல்
நதியாய் தோணுதடி
அச்சில் செய்த அழகுப்பெண்ணே-உன்
அன்பு போதுமடி
எச்சில் கூட விருதாய் எண்ணி-என்
இதயம் ஓதுமடி

உன்னை செய்த மிச்சம் தானா
நிலவு பூங்கிளியே
இன்னும் எதற்கு அச்சம் வீணா
ஒன்றிட வாவெளியே

இனிமைப்பூவே கனவுத்தீவே-நீ என்
இளமைக்கு பரிசு
இனிமேல் என்றும் இணைந்து வாழ
இளகாதா மனசு?!