ஞாயிறு, 25 அக்டோபர், 2015

இவ்வழியால் போக முடியும்.



கால நிலத்தின் மேல்
வாழ்க்கை என்ற ஊரிலிருந்துதான்
தொடங்குகிறது அந்த வழி

எப்படி நடந்தால் போய் சேர முடியும்
எப்படி நடந்தாலும் போய் சேர முடியும்
இப்படியும் நடக்கலாம்
அப்படியும் நடக்கலாம்
தடுக்கி விழுந்த நொடி
தடிகளை ஊன்றிய படி
யாரையும் முந்திக் கொண்டும்
குறுக்கறுத்தும் கடக்கலாம்
உங்களுக்கு வசதியாக
பாதை அதன் பாட்டில் விரிந்து கிடக்கிறது

பயணத்தை நீங்கள் துவக்கிக் கொள்ளல்லாம்
அம்மணமாய், வெறுங் காலுடன்
உயர் ரக சப்பாத்துக்கள் தரித்தும்
அல்லது....., உங்களிடம்
வாகன வசதி இருந்தால்
கால்களை களற்றி அதனுள்
போட்டுக் கொண்டும் போகலாம்

இடுகாடு வரை போகும் என்று
போனவர்கள் சொன்னார்கள்
அப்படி இல்லை என்றே
இங்கு இருப்பவர்கள் பலர் இன்னும்...,

ஆனால்;
திரும்பி வருவதற்கான வழி மட்டும்
இந்த தெருவில் இல்லை என்று

எல்லோருக்கும் தெரியும்.