செவ்வாய், 29 மே, 2012

தப்பித்து வந்தவனின் மரணம்.




நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன். 
முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும்.
தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய்.
எங்கேயோ பார்த்த பரிச்சயத்தில்தான் பேசத்தொடங்கினான்.
வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை
மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் .
சட்டி ,பானை ,உலாமூடி,பீங்கான் ,அகப்பையென குடும்பமாய்
வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான்.

காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு
அவனது உலகமே அழிந்ததாய் கதறினான் .
நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும்,
குரூரமான எல்லா விஷஜந்துக்களையும் பார்த்ததாகவும்,
பயத்தின் நடுக்கம் மேலிட தழுதழுத்த குரலில் சொன்னான்.

வாழ்வு பற்றிய பசி, தாகம்
அவனது கண்களிலிருந்து உதிர்ந்து விழுந்தது நெருப்பின் சாயலில்.
வயிற்றை இறுக தடவிய படி ஐயா என்றவாறு சரிந்தான்
மீண்டெழ முடியாதபடி சாவின் மடியில்.
இறுக மூடிய விரல்களை பிரித்தபோது .....,
உள்ளங்கையில் ஒரு பிடி மண்ணிருந்தது .
அவனது ஊரினுடயதாய் இருந்திருக்க வேண்டுமது.
மரண வாக்குமூலமாய் என்னிடம் கூறியதை பார்த்தால்
இவன் பொய் சொல்லியிருக்க மாட்டான்.
என்பதை எண்ணியெண்ணி,பேய் பிடித்தது போல்
அதற்கு பின்வந்தநாட்கள் தூங்கவே இல்லை நான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.