புதன், 19 டிசம்பர், 2012

மருதாணி புள்ளிகளும் உன் வெட்க சிரிப்பும்.



சாலையோர சந்திப்பில்
கண்களால் கடந்து 
சிரிப்பால் நீ..
நட்சத்திரங்களை உதிர்த்துவிட்டாய்
எனக்குள் பௌர்ணமிகள் உதித்தன
கனவுகளின் சொற்காதேசத்துக்கு
கைகோர்த்து என்னை
அழைத்து செல்கின்றன..
உன் வெட்கம்.

அன்பே.....
இறந்து இன்னுமொருதடவை
பிறக்கலாம் போலிருக்கிறது
உன்னை அணு,அணுவாய் தரிசிக்க

மருதாணி புள்ளிகளுக்கிடையில்
சிவந்துகிடக்கும் உன் எழில் கண்டு
பூக்கள் இனி பொறாமைப்படும்
உன்னிடம் தோற்க விரும்பாத
குயில்கள் இனி ஊமையாக உலவும்
மோட்சமடைந்த உனது
கால் கொலுசின் சிணுங்கல்களில்
பறவைகளின் பாடல்
தினம்,தினம் என்னை
தவிப்பிலாழ்த்தி தாலாட்டுகின்றன

ஓடைகளில் உலவி தாவிக்குதிக்கும்
மீன்களுடன் விளையாட துடிக்கும்
மனசு என்னுடையது
இன்று உன்
பூப்பெய்திய புன்னகையின் பின்
மனசும்,வயதும் ஒன்றாய் இணைந்து
ஒற்றை வரவுக்காய்
இரட்டைத்தவம் இருக்கிறது

வந்து போ என் வாசல் பக்கம்
காதலிக்க வேண்டாம்-ஒரு
கைகுலுக்கலாவது  தந்து
நீ வாழும் ஊரில் வசிப்பது
எனக்கு
பெருமைக்குரிய பெறுபேறு.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.